⚖ சட்டம் அறிந்துகொள்வோம்!

வாரிசு சான்றிதழ் – கேள்விகள்-பதில்கள் – என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்.

வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?

ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

*வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?*

நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

*எங்கே விண்ணப்பிப்பது?*

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில்  கிடைக்கிறது.

வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் நகல்
வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ் நகல்

எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், அதற்கு அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று விண்ணப்பித்து, வழக்கறிஞர் மூலமாக பிரபல தமிழ் நாளிதழில் வாரிசு சான்றிதழ் கோரியுள்ள விளம்பரத்தை வெளியிட்டு, 15 நாட்களுக்குள் ஆட்சேபணை யாரும் தெரிவிக்காத பட்சத்தில் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் அதனை வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெறமுடியும்.

சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால்?

ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.

விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?

விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான அல்லது மறுப்பதற்கான காரணத்தை வட்டாட்சியர் அவர்கள் கூற வேண்டும்.

எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.

இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)

இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

மாற்று வழி

இறங்குரிமை சான்றிதழ் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் ஒன்றில் இறந்தவருடைய வாரிசுகள் அனைவரும் தங்களுக்குள் ஒருவரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து, அவரிடம் பண பலன்களை அல்லது வாரிசுக்கான வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பரிசீலணை செய்து அவர் சான்றிதழ் வழங்குவார்.

ஒருவர் காணாமல் போயிருந்தால்..?

வாரிசுதாரர்களில் ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து புகார் அளித்து, காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.

எப்போதெல்லாம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்?

குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.

குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.

குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார்.

போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.

இந்திய குடியரசுத்தலைவர்கள்

TNPSC, SSC, RRB, BANK competitive exam தயாராகும் மாணவ மாணவிகளுக்கு இந்த பதிவு உபயோகப் படலாம்.

இதுவரை இந்தியாவில் குடியரசுத்தலைவர்கள் பெயரை வரிசையாக நினைவில் வைத்துக்கொள்ள ஒரு சில shortcut.

Short cut 1:

1. RAZA GIRI  Higher secondary school For Girls

RA – ராஜேந்திர பிரசாத் & ராதாகிருஷ்ணன்
ZA – ஜாகிர் ஹுசைன்
GIRI – VV . கிரி
H – ஹிதயத்துல்லா
G – கிரி

Short cut 2:

2. FB NEw GRoup

F – பக்ருதீன் அலி அகம்மது
B – B.D, ஜட்டி
NE – நீலம் சஞ்சீவ ரெட்டி
G – கியானி ஜெயில் சிங்
R – ராமசாமி வெங்கட்ராமன்

Short cut 3:

3. SNAP DealeR

S – சங்கர் தயாள் சர்மா
N – நாராயணன்
A – அப்துல் கலாம்
P – பிரதீபா படேல் & பிரணாப் முகர்ஜி

R – ராம்நாத் கோவிந்த்

கருப்பு டீ, ☕ காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்.

பல்வேறு ஆய்வுகள் உணவுப் பாதை, கல்லீரல், சிறுநீரகம் குடல், மார்பக புற்று நோய்களை கருப்பு டீ மற்றும் காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளாக குறிப்பிடுகின்றன.

உலகில் மிகவும் பரவலாக மக்களின் பழக்கத்தில் இருப்பது காபி, டீ இரண்டும்தான். ஊரில் டீ கடைகளை மூடி விட்டால் 90 சதவீதம் மக்கள் சுருண்டே படுத்து விடுவார்கள் எனலாம்.

காபி, டீ நல்லதல்ல, விட்டு விடுங்கள், என்றே பலரும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். ஆனால் அநேகருக்கு முடிவதில்லை. 3 நாள் சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் இருப்பார்கள். ஆனால் ஒரு வேளை டீ அல்லது காபி இல்லாவிட்டால் தலைவலி மண்டையினை உடைத்து விடுகின்றது. இப்பொழுது பலர் கருப்பு டீ, கருப்பு காபி, லெமன் டீ என்று வித்தியாசமாகக் குடிக்கத் தொடங்கியுள்ளனர். 

கேபின் எனப்படும் பொருளே இந்த காபி, டீயினை நம்மை ஈர்த்து குடிக்க வைக்கின்றது. ஒரு காபியில் (240மிலி) 95 மிகி அளவு கேபின் உள்ளது என்றால் அதே அளவு கருப்பு டீயில் 47 மிகி அளவு கேபின் உள்ளது. இந்த கேபினுக்கு பல நீண்ட கால நோய்களின் பாதிப்பு அபாயத்தினை வெகுவாய் குறைக்கும் தன்மை உண்டு. விளையாட்டுகளில் திறமையைக் கூட்டும் மன நலம், மனக் கூர்மை இவற்றினை அதிகரிக்கச் செய்யும். 

நரம்பு மண்டலத்திற்கு ஒரு ஊக்குவிப்பாக அமைகின்றது. 1 கப் காபி, டீ குடித்தால் சுறுசுறுப்பாக இயங்குவது இந்த காரணத்தினால்தான். மறதி நோய், மது அருந்தாதவர்களுக்கு உண்டாகும் கொழுப்பு, கல்லீரல் இவை அனைத்தும் அதிகம் தவிர்க்கப்படுவதும், குறைவதும் நிதான அளவில் காபி, டீ குடிப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள். ஆனால் கேபின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. 

கருப்பு டீயினால் நுரையீரல், குடல் புற்று நோய் வளர்ச்சியினை தடுப்பதாகவும் புற்று நோய் செல்களை அழித்து விடுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவில் கருப்பு டீ, காபி கேன்சர் செல்களில் இருந்து காக்கும் தன்மை படைத்தது என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தொடரும் ஆய்வுகள் உணவுப் பாதை, கல்லீரல், சிறுநீரகம் குடல், மார்பக புற்று நோய்களை கருப்பு டீ மற்றும் காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளாக குறிப்பிடுகின்றன. 

*  மேலும் ரத்த குழாய் அடைப்புகளையும் நீக்குகின்றன. 

* காபி, டீ இரண்டுமே சக்தியை கூட்டுகின்றன.  எடை குறைய உதவுகின்றன. காபிக்கு சில பக்க விளைவுகள் எ.கா, உயர் ரத்த அழுத்தம் போன்றவை குறிப்பிடப்பட்டாலும் அளவான முறையில் இதனைப் பருகினால் நன்மைகளே ஏற்படும். ஆனால் சிலருக்கு கேபின் ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். கேபினை ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சிறிய அளவு அருந்தியதுமே 

* படபடப்பு, தலைவலி, அதிக வியர்வை, 

* தூக்கமின்மை, உடல் அரிப்பு, தொண்டை, நாக்கில் வீக்கம், 

* மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.

உங்களுக்கு அலர்ஜி இருக்கிறதா என மருத்துவர் மூலம் பரிசோதித்துக் கொள்ளலாம். 

இந்த கேபின் ஒவ்வாமை வயது, பரம்பரை நோய், கல்லீரல் செயல்பாட்டு குறை இவற்றின் காரணமாகவும் ஏற்படலாம். அதிக அளவில் கேபின் எடுத்துக் கொள்பவர்களுக்கு அலர்ஜி போல் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. காபியோ, டீயோ, பால், சர்க்கரைசேர்த்து அருந்துவதுதான் நம் பழக்கம், ஆனால் கருப்பு காபி, கருப்பு டீ இவற்றில் கலோரி சத்து குறைவு என்பதாலயே இவை அதிகம் பரிந்துரைக்கப் படுகின்றது. 

கேபின் மிதமான அளவில் மட்டுமே நல்லது. இல்லையெனில் இதற்கு குடி போல் நாம் அடிமையாகி விடுவோம். உடல் நலம் எனும் பொழுது அதில் கழிவுப் பொருள் வெளியேற்றமும் சீராக இருக்க வேண்டியது அவசியம். 

பலருக்கு மலச்சிக்கல் இருந்தாலும் அதனை ஒரு பெரிய பிரச்சினையாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஏன் இந்த பிரச்சினை இருக்கின்றது என்பதனை மருத்துவ ஆலோசனை மூலம் அறிந்து சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

Thanks to மாலைமலர்.

சட்டம் அறிந்து கொள்வோம்.

“இந்திய மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டம் (Indian Drugs and Cosmetics Act)” என்று ஒரு சட்டம் இருக்கிறது.

இந்திய மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தின் விதி எண் 106-ன் கீழ், அட்டவணை J பிரிவின்படி பின்வரும்  நோய்கள், உடல் தொல்லைகள் எந்த மருந்துகளாலும் தடுக்கவோ, குணப்படுத்தவோ 
முடியாதவை

இந்த வாசகத்தின் கீழ் உள்ள நோய்கள் / உடல் தொல்லைகளின் 
எண்ணிக்கை 51. அதாவது 51 வகையான நோய்கள் மற்றும் 
தொல்லைகளை மருந்துகளால் தடுக்கவோ, குணப்படுத்தவோ முடியாது என அந்தச் சட்டம் வரையறுத்துள்ளது.
அவற்றிலி௫ந்து சில இங்கு…

‘சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கருப்பைச் சீர்கேடுகள் மற்றும் 
கருப்பை நோய்கள், குடல் இறக்கம், ஆஸ்துமா, புற்றுநோய், உடல் 
பருமன், பித்தப்பை கல், சிறுநீரகக் கல், பக்கவாதம், உடலுறவுச்  செயல்பாட்டை அதிகரித்தல், வலிப்புநோய், நரம்பு வீக்கம் (Vericose Vein).’

இவை தவிர, வேறு சில போலி வாக்குறுதிகளையும் இந்தச் சட்டம் தடைசெய்துள்ளது.
‘தலைமுடியின் வண்ணம் மாற்றுதல், வழுக்கையில் முடி வளரச் செய்தல்,சிவப்பழகு 
உருவாக்குதல், நினைவாற்றலை அதிகரிக்கச் செய்தல், உயரமாக வளரச் செய்தல், ஆண்/பெண் குறிகளின் அளவை/வடிவத்தை அதிகரித்தல், உடலுறவு நேரத்தை நீட்டித்தல், பற்களின் வலிமையை அதிகரித்தல்.’

சமூகத்தின் பெரும்பகுதியினருக்கு, இப்படி ஒரு சட்டம் இருப்பதே 
தெரியாது. மேற்கண்ட நோய்களுக்கும்/குறைபாடுகளுக்கும் எவ்வளவு 
மருந்துகள் விற்கப்படுகின்றன என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இவ்வாறு விற்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகளை’ இப்போது அறிந்துகொள்ளுங்கள். இந்த நோய்களையும் குறைபாடுகளையும் 
மருந்துகளால் தீர்க்கவோ, தடுக்கவோ முடியாது’ என்பது சட்டம். 

ஆனால், ‘இந்த மருந்துகளை மக்களுக்கு அளிக்கக் கூடாது’ என்று சட்டம் இல்லை. மாறாக, ‘இந்த மருந்துகள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் சம்மதித்தால் மட்டுமே அந்த 
மருந்துகளை அளிக்க வேண்டும்’ என்கிறது சட்டம்.

நோய்களின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து, அதை சரிசெய்தல்தான் மருத்துவத்தின் அடிப்படையான கருத்து. மாறாக, நோய்களின் அறிகுறிகளை மட்டும் கவனித்து அவற்றை மட்டுப்படுத்தும் வகையிலான மருந்துகளை அளித்தால், நோயின் தீவிரம் அதிகரிக்கும். உறுப்புகள் கெடும்.

இந்தி – தேவையில்லாத ஆணி!

இந்தி தேவை…. கேட்பதற்கு நன்றாக இருக்கும் ஆனால்…

பணக்காரன் வூட்டு பசங்கள்லாம் இந்தி சொல்லித்தர்ற பள்ளிக்கூடத்துல படிக்கவெச்சிட்டு உங்கள மாதிரி ஏழை பாழையெல்லாம் இந்தி படிக்கக்கூடாதுன்னு தடுக்கறாங்க..

இப்படியொரு பொங்கல் வாசகத்தை ஆங்காங்கே காணலாம்.

இந்தி கற்றதால் நான் அடைந்த லாபம்…
இந்தி தெரியாததால் ரொம்ப கஷ்டப்பட்டேன்..

இதுமாதிரியான நெஞ்சும் நக்கும் ரைட் அப்புகளையும் நிறைய காணலாம்.. இவர்களின் ஒரே பம்பலக்கடி ஜிம்பா, நல்லவாய்ப்பு.. மற்றபடி ஒரு பொடலங்காயும் இல்லை

இவர்கள் ஆசை காட்டுவது, வேலை என்ற அஸ்திரம், நாம் சிந்திப்பது இனம் மொழி, மண்ணின் கலாச்சார உயிர்ப்புத்தன்மை

பணக்கார வீட்டு பசங்க பள்ளிக்கூடத்தில் இந்தி இருக்கு. அங்கு இந்தி கற்றதனாலேயே வேலை பெற்று உயர்ந்தார்கள் என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.. இந்தியும் கற்றார்கள் அவ்வளவுதான்.

விரும்பிப்போய் இந்தி கற்கும் யாரையும் தடுத்த நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை. விருப்பம் உள்ளவர்கள் எங்கும்போய் படிக்கலாம்.

இதை எழுதும் ஏழுமலை வெங்கடேசன் என்ற நான் இந்தித்திரைப்படங்களின் அநியாய காதலன்..இந்தி சினிமா ஜாம்பவான்கள் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதிய அளவுக்கு, இந்தி படி இந்தி படி என்று சொல்லும் இந்தி தாசன்கள் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே.

இங்கு பிரச்சினை என்ன? மும்மொழிக்கொள்கை என்ற அஸ்திரத்தின் மூலம் மத்திய அரசு, பல இனங்களுக்கு எதிராக போர் தொடுக்கிறது.

மற்ற மாநிலங்களை விடுங்கள்.நம் மாநிலத்தை வைத்து பேசுவோம்.மத்திய அரசு நான் உங்களுக்கு இந்தி சொல்லித்தருகிறேன் என்று சொல்கிறது. நீங்களும் கற்கிறீர்கள்..

ஒரு கட்டத்தில் உங்களுக்குத்தான் இந்தி தெரியுமே என்று இந்தியிலேயே தொடர்பு கொள்ளுங்கள் என்ற ஆரம்பிப்பார்கள். அப்புறம் எதற்கு பல மொழிகளில் தேர்வு என்றும் நாடு முழுக்க ஒரே மொழி என்று சொல்லி தேர்வையே முழுக்க முழுக்க இந்தியில் நடத்துவார்கள்.

மத்திய அரசிற்கும் மாநில மக்களுக்குமான தொடர்பில் முதலில் இங்லீஷ் காலியாகும். அடுத்து நம் தாய் மொழி காலியாகும்..

இதெல்லாம் சாத்தியமா? ஏன் சாத்தியமாகாது, இப்போது மத்திய அரசின் தமிழ்நாட்டு அலுவலகங் களில் இந்தி வாலாக்களின் ஆதிக்கம்தான். ரயில்வே நிலையங்கள், ஸ்டேட் பேங்க் போன்ற இடங்களில் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோம் என்று என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா? நமது பேருந்து நிலையங்களில் ஏற்படும் உணர்வுக்கும் ரயில் நிலையங்களில் ஏற்படும் உணர்வுக்கும் வித்தியாசம் உணர்ந்ததில்லையா?

தமிழ்நாட்டுக்குள், திருச்சிக்கும் நெல்லைக்கும் இடையே ஓடும் சதாப்தி ரயிலில் பெரும்பாலும் தமிழர்கள்தான். ஆனால் தமிழ் மொழி எங்காவது பெரியதாக தென்படுகிறதா? சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயிலுக்கான பயணச்சீட்டில்கூட ஒரு கட்டத்தில் தமிழ் காணாமல் போயிருந்தது.

ஒரு பக்கம் வடமாநிலத்தவர் தொழிலாளர்களாக லட்சக்கணக்கில் குடியேறி பல உரிமைகளை பெற்று நிரந்தமாக இங்கு இருக்கின்றனர். இந்த சூழல் அதிகமாக அதிமாக இந்தி என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிடும் பாமர இந்திக்காரனுக்காக பேருந்துகளில் இந்தி சேர்ப்பது தவறா என்று கேட்பார்கள்,

வடமாநிலத்தவர் வசதிக்காக என  தொழில் மற்றும் வியாபாரங்கள்ல் இந்தி பரவலாக குடியேறும்.. தேவை என்ற பட்சத்தில் சம்மந்தப்ப்டட தமிழன் இந்தி பேச பழகிக்கொள்ளப்போகிறான்.

ஆனால் மத்திய அரசாங்கம் நமக்கு கற்றுக்கொடுத்து விட்டு, நீயும் இந்திக்காரனாகவே மாறவேண்டும் என்று சொல்லும் அபாயம் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்தால், வேலைவாய்ப்பு என்கிற மாய்மாலை வேலையெல்லாம் ஜுஜுபியாக தெரியும்.

இந்தியால் தமிழ்மொழி அழிந்துவிடுமா? இப்போ தைக்கு அழியாது, ஆனால் காலப்போக்கில் அந்த கதி ஏற்பட்டுத்தீரும். வடமாநிலங்களில் இந்தியால் அழிந்துபோன தொன்மையான மொழிகள் ஏராளம்.

இன்றைக்கு பேச்சு வழக்கில் பல மொழிகளுக்கு எழுத்துவடிவம் காணாமல் போய்விட்டது. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பெயர் தெலுங்கில் எப்படி இருக்கும் என்பதுகூட தெரியாது.

இந்தித்திணிப்பு என்பது பெரும் பயங்கரத்தை முதுகுப் பின்னால் வைத்துக்கொண்டு, அரைவேக்காடுகளை விட்டு வேலை வாய்ப்பு என சிரித்த முகத்துடன் கூவிக்கொண்டிருக்கும். அந்த அரைவேக்காடுகளை தூக்கி சுயபுத்தி என்ற குக்கரில் போட்டு நாலு விசில் வைத்தால் வெந்துபோய்விடும்…

மாநில மொழிகளை அழித்து ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு இந்திக்கு எந்த அதிகாரமும் வரலாறும் இல்லை. அப்படி ஒரே நாடு ஒரே மொழி என கொண்டுவர முயற்சித்தால் தமிழ் மொழியைத் தான் கொண்டுவர வேண்டும். ஏன் என்றால் மிகவும் தொன்மையான மொழி… பிற மாநில மொழிகளுக்கும் தாய் மொழி தமிழ் தான். அதனால் தான் இந்தி தேவையில்லாத ஆணி.

சிறுகதை! – குப்பை!

சிறுகதை! – குப்பை!

“ம்ம்மா…, குப்பேய்…!” அடித் தொண்டையிலிருந்து கிளம்பிய குரல், இரண்டு பக்கமும் அப்பார்ட்மென்ட் கட்டடங்களும், மாடி வீடுகளும் நெருக்கியடித்து நின்றிருந்த அந்த வீதியின் தொடக்கத்திலிருந்து கேட்டது. குரலின் தொடர்ச்சியாக வீதிக்குள் திரும்பி கொண்டே, நுழைந்தது இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, அடர்த்தியான பச்சை நிற குப்பை வண்டி.

வண்டியின் உள்ளே இரண்டு பெரிய பிளாஸ்டிக் ட்ரம்கள்.  பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில், வெயிலில் வெளுத்துப் போய் கிட்டத்தட்ட பச்சையாகவும், சிவப்பாகவும் இருந்தன. வண்டியின் ஒரப்பகுதிகள், ட்ரம்களில் மாநகராட்சியின் பெயர், வெள்ளை பெயிண்ட்டால் ஸ்பிரே செய்யப்பட்டிருந்தது. வண்டியின் நீளமான இரும்பு கைப்பிடியின் வெள்ளி வண்ணங்கள் உதிர்ந்து போய் இருந்தது.

கைப்பிடியின் இரு முனைகளிலும் கெட்டியான சாக்குப்பைகள் கட்டி தொங்கவிடப்பட்டு உப்பியிருந்தது. அதில் இரும்புக்கம்பிகள், உடைந்த மரச்சட்டங்கள், பிளாஸ்டிக் பட்டைகள் வெளியே ஆர்வமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. ட்ரம்களில் அதுவரை சேகரித்த குப்பைகளின் கலவை கிடக்க, அவற்றின் மேல் ஈக்களின் ரீங்காரம். வண்டியை தாண்டி நடந்த இரண்டு பெண்கள் மூக்கில் விரல்களை வைத்துக் கொண்டு, வேகமாக விலகி சென்றனர்.

வண்டியை தள்ளுபவள் கைகளில் நீல நிறத்தில், வெள்ளை புள்ளிகள் வைத்த ரப்பர் வளையல்கள். சிவப்பு நிறத்தின் மேலே, மஞ்சள் பூ தெளித்திருந்த, நைலான் சேலையின் மேலே அரைக்கை சட்டை அணிந்திருந்தாள். சட்டை பெரியதாக இருந்தது. சட்டைக்கு மேலே இடுப்பைச் சுற்றி, சிவப்பு நிற நூல் துண்டு ஒன்றை கட்டியிருந்தாள். காதுகளில் கவரிங் தோடுகள், அவற்றில் நரை முடிகள் ஒன்றிரண்டு சிக்கி, காற்றில் மெதுவாக அசைந்தது.

“ம்மா.. குப்ப..மா..!” மீண்டும் குரல் எழும்பி எதிரொலிக்க, மாடிகளிலிருந்து நைலான் கயிறுகள் வழியாக வாளிகள், கீழே மெதுவாக இறங்க ஆரம்பித்தன. ஒவ்வொரு மாடியிலிருந்தும் இறங்கிய நைலான் கயிற்றின் முனைகளில் சிறிய இரும்பு கொக்கிகள் கட்டப்பட்டு, கொக்கியின் மறுமுனையில் குப்பை வாளிகள் மாட்டப்பட்டிருந்தன.

கயிறுகளின் மறுமுனையில் கைகள், லாவகமாக இயங்கி வாளிகளை கீழே இறங்க வைத்துக் கொண்டிருந்தன. மூன்றாவது, நான்காவது மாடிகளிலிருந்து சரியாக தரைக்கு மேலே, நிலை நிறுத்தியவர்கள் தங்களுக்குள் சந்தோஷமடைய, புதிதாக பழகுபவர்களின் பதற்றம் வாளிகளின் ஆட்டத்தில் தெரிந்தது. தரைத்தள வீடுகளிலிருந்தவர்கள், குப்பை கூடைகளுடன் வந்து ட்ரம்மில் கவிழ்த்து விட்டு போனார்கள். வண்டியை தள்ளிக் கொண்டு வந்தவள், வண்டியிலிருந்த அலுமினிய பேசினை எடுத்துக் கொண்டு, மேல் வீடுகளிலிருந்து இறங்கிய, இறங்கிக் கொண்டிருந்த வாளிகளை நோக்கி சென்றாள்.

தொங்கிய வாளிகளிலிருந்த குப்பைகளை வேகமாக பேசினில் கவிழ்த்து, நிரம்பியவுடன் வண்டிக்கு வந்து ட்ரம்களில் கொட்டினாள். காலை வெயில் வேகமாக சூடேற, நெற்றியில் வியர்வையை வழித்து விட்டு, வண்டியை முன்னே தள்ளி, தள்ளி நிறுத்தி குப்பைகளை சேகரிக்க தொடங்கினாள்.  அறுவடை செய்யும் நளினம் அவள் கைகளில் திகழ, கைகள் சீராக இயங்கின.

அந்த வீதியின் கடைசி வீடு வரை சென்று குப்பைகளை சேகரித்து முடித்து விட்டாள். அங்கே ஒரே ஒரு வாதாம் மரம், அகலமான இலைகளால், நிழல் பரப்பி நின்றிருக்க, மரத்தினடியில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். வண்டியை நிறுத்தி விட்டு, நிழலில் நின்று இடுப்பிலிருந்த துண்டினால் முகம், புறங்கழுத்து பகுதிகளில் வியர்வையை துடைத்தாள். நெற்றியில் நகர்ந்திருந்த ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து ஒட்டினாள்.

சின்ன, சின்ன பொம்மைகள், பொருட்களை வைத்து குழந்தைகள் மிகுந்த சுவராசியத்துடன் விளையாடி கொண்டிருந்தன. அவர்களை பார்த்து கொண்டு நின்றாள். பின் வண்டிக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்திருந்த பாட்டிலை எடுத்தாள். காலியாக இருந்தது.  பாட்டிலை அங்கேயே வைத்து விட்டு, அருகிலிருந்த வீட்டை அடைந்து இரும்பு கேட்டின், தாழ்ப்பாளை தட்டினாள். கதவு திறந்து வீட்டினுள்ளிருந்து எட்டி பார்த்தவள், “என்ன வேணும்? என்றாள். “குடிக்க கொஞ்சம் தண்ணீ வேணும்மா!” எனக்கூற, மையமாக தலையை ஆட்டி விட்டு, உள்ளே மறைந்தாள்.

கதவு சாத்திக் கொண்டது. இரண்டு நிமிடங்கள் கழித்து கதவு திறக்க, கையில் தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் பாட்டிலுடன் வெளியே வந்து, பாட்டிலை இரும்பு கேட்டின் மேல் வழியாக கொடுத்தாள். வாங்கி தண்ணீரை வேகமாக குடித்து விட்டு, பாட்டிலை திருப்பி தர எத்தனிக்க, “வேணாம்! வேணாம்! ஆன்ட்டி உங்களையே வச்சுக்க சொன்னாங்க!” என்றபடியே, திரும்பி உள்ளே சென்றாள். “சரிம்மா!” என்றபடி, கையிலிருந்த துண்டை இடுப்பைச் சுற்றி கட்டிக்கொண்டே, தன் வண்டிக்கு சென்று அங்கிருந்த காலி தண்ணீர் பாட்டிலை கோணி சாக்கினுள் போட்டாள், அதனிடத்தில் இந்த பாட்டிலை வைத்தாள். வண்டியை பின்னால் இழுத்து, அரை வட்டம் போட்டு திருப்பி தள்ளிச் சென்றாள். அந்த கோணி சாக்கினுள் நிறைய காலி பாட்டில்கள் இருந்தன.

குப்பை வண்டி கொண்டு வந்து குப்பை வாங்கிச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஆகப்பெரிய அவமானத்தை கண்முன் கொண்டுவருகிறது இந்த நிகழ்வு. குப்பை வண்டிக்காரி குப்பையை அள்ளிச்சென்றாலும் அந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்த வீட்டுக்காரியின் மனதில் உள்ள குப்பையை அகற்ற முடிவதில்லை…!

வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு

இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், நெடுங்காலம் வரையில் படிப்படியாகக் கலப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எழுத்து வழக்கற்ற பேச்சு மொழியாக ஒன்றும், மற்றொன்று பேச்சு வழக்கற்ற எழுத்து மொழியாகவும், இருப்பின், முன்னது விரைவில் மாறும் புதுமொழியாக உருப்பெறும்.

ஒன்று எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழியாகவும், மற்றொன்று பேச்சு வழக்கு அற்ற மொழியாகவும் இருப்பின், முன்னது பல சொற்களைக் கடன் வாங்கிக் கொள்ளும். பின்னது ஒரு சில சொற்களையே கடன் வாங்கும். வடமொழியில் தமிழ்ச் சொற்கள் ஒரு சில மட்டும் இருத்தற்கும், தமிழில் வட சொற்கள் பல புகுந்தமைக்கும் காரணம் இதுவே.

இவ்வாறு படிப்படியாக நிகழும் மொழிக்கலப்பு, எழுத்து மொழியில் இடம்பெற நீண்ட காலமாகும். பேச்சு மொழியிலோ விரைவில் இடம் பற்றி வழக்கில் இருக்கும்.
இவ்வாறு பேச்சுமொழி வழக்கில் இருக்கும்போதே, தாய்மொழியில் தோன்றிய சொல்லாக்கத்தின் எதிர்ப்பால் பிறமொழிகள் மறைந்தும் போகும்.

‘ஜனம்’ – மக்கள், ‘ராஜா’ – அரசன், ‘அபேட்சகர்’ – வேட்பாளர், ‘ஓட்டு’ – வாக்கு,  ‘ஓட்டர்’ – வாக்காளர், ‘விருக்ஷம்’ – மரம், ‘கேசம்’ – முடி.
 

மேற்குறிப்பிட்ட சொற்களில் வடமொழிச் சொற்கள், பழைய தமிழ்ச் சொற்களை மீண்டும் பயன்படுத்தியதாலும், புதிய சொல்லாக்கங்களாலும் வழக்கொழிந்து விட்டதை அறியலாம்.

மொழிக்கலப்பு நிகழும் போது மக்களின் நம்பிக்கையின் வழியாகச் சென்று கலக்கும் பிற மொழிச் சொற்கள் நீண்ட காலம் உயிர்வாழ நேரிடுகிறது. இதே போன்று வாணிக வழியில், அறிவியல் வழியில் நுழையும் சொற்களையும் அகற்றுவது ஒரு மொழிக்குக் கடினமாகும். மொழிக் கலப்பு நிகழ்ந்த தமிழ் மொழியிலும், இவ்வாறே எழுத்து வழக்கிலும், பேச்சு வழக்கிலும் பிற மொழிச் சொற்கள் கலக்க நேர்ந்துள்ளது.

இவை எழுத்து வழக்கில் குறைவாக இருப்பினும், பேச்சு வழக்கில் இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்பட்டு வரும் பிறமொழிச் சொற்களை இவ்வியலில் ஆய்ந்தறியலாம்.

வடமொழி வழக்கு
———————————

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச் செய்திகள் பலவற்றையும் தத்தம் தாய்மொழிகளில் எழுதிய சான்றோர்கள், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகவும், விரிவாகவும் குறிப்பிட வேண்டிய செய்திகள். இந்திய எல்லையில் அனைவருக்கும் பயன்படல் வேண்டுமென்ற கருத்தால் அவற்றை வடமொழியில் வரைந்தனர்.
மேலும் வானியல், சிற்பம் போன்றவற்றின் கலைச்சொற்கள் பலவும் வடமொழியிலேயே கொள்ளப்பட்டுத் தத்தம் மொழிகளுக்கு ஏற்பச் சில திரிபுகளுடன், இந்திய நாட்டில் பன்மொழி பேசும் பல்வேறு பகுதியினரின் தாய்மொழிகளிலும் ஏற்கப்பட்டன. இம்முறையில் வடமொழிச் சொற்கள் பல அப்படியேயும், சிறிது திரிந்தும், தமிழிலும் வழங்கப்பட்டன.
இன்று வழங்கும் விண்மீன்களின் பெயர்களும், மாதங்களின் பெயர்களும், வடமொழியிலிருந்து தமிழொலிக்கேற்பச் சிறிது திரித்தும், திரிக்காமலும் கொள்ளப்பட்டன.
இற்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகத் திகழும் தொல்காப்பியத்திலும், மாதப் பெயர்களும் விண்மீன்பெயர்களும் ஏற்கப்பட்டன என்று கருதுவாரும் உளர். சொல்லமைப்பிலும், சொற்றொடர் அமைவிலும் வடமொழியைப் பின்பற்றிய முறைகளும் உண்டென்றும் சிலர் எழுதினர். இவ்வாறு தொன்று தொட்டே வடமொழி தமிழின் மீது வல்லாண்மை செலுத்திக் கலப்பு நிகழ்த்தும் மொழியாக இருந்து வந்துள்ளது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றிருந்த போதிலும், வடமொழியின் வரவுக்கு வழிவகுத்தனர். வட மொழியின் வழியாகப் புகுத்தப்பட்ட சமயம், சோதிடம் போன்ற நம்பிக்கைகள் மன்னர்களுக்கு மகிழ்வூட்டும் கலைகளாக இருந்தன.
இத்துறைகளில் வல்ல பல வடமொழியாளர்களைத் தமிழ் மன்னர்கள் காத்து, அவர்கள் மொழி தமிழகத்தில் பரவிடவும் வழி வகுத்தனர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் நிகழ்ந்த தமிழ்க் காப்புப் போராட்டம் வடமொழிக்கலப்பைத் தடுக்க முயன்றது. இருப்பினும் மணிப்பிரவாள உருவில் வடமொழிக் கலப்பு நிகழ்ந்து கொண்டே இருந்தது.
இந்நூற்றாண்டில் தோன்றிய திராவிட இயக்கம், தமிழ்மொழி, இனம், பண்பாடு, கலை ஆகியவை பிறமொழித் தாக்குதலிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனப் பொங்கி எழுந்தது’.
இதன் விளைவாக மேலும் பிறமொழிக் கலப்பு நிலை தடுக்கப்பட்டது. இருப்பினும், அன்றாட வழக்கில் கலந்துவிட்ட வடமொழிச் சொற்கள் கடவுள் நம்பிக்கை வழிவந்தவையாகவும், சோதிடக்கலை வழிவந்தனவாகவும் இருந்தமையால், அவற்றை எளிதில் நீக்க இயலாத நிலை உள்ளது.

இவற்றை நல்லன எனக்கருதி மக்கள் ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாக உள்ளது. மக்கள் ஏற்றுக் கொண்டமைக்கான காரணத்தைப் பேராசிரியர் இரா. இராகவையங்கார் ‘தமிழ்மொழியுள் ஆரியச் சொற்கள் நேரேயும் திரிந்தும் சிதைந்தும் மற்றைத் திசைச் சொற்களினும் மிகுதியாக வழங்கியதற்குக் காரணங்கள் அடுத்துப் பயின்ற திசைத் தொடர்பு மட்டுமல்லாது, அறிவு ஒற்றுமையும், மனக்கோட்பாட்டிற்குப் பெரிதும் ஏற்றது பற்றியும், எம்மொழியிலும் அதன் கண்ணுள்ள நல்லனவற்றையும் கொள்ளும் சிறந்த பெருநோக்கமும் ஆகுமென்று துணிவது தகும்’ எனக் குறிப்பிடுவதைக் கருத்தில் கொள்ளலாம்.

கடவுள், கோயில் தொடர்பாக இன்றும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் வடமொழிச் சொற்களைக் காண்போம்.
 ‘பிரகாரம்’, ‘பார்வதி’,  ‘பூஜை’, ‘தீபாராதனை’, ‘புனஸ்காரம்’, ‘அங்கப் பிரதட்சணம்’, ‘புஷ்பம்’, ‘எதேஷ்டம்’, ‘உற்சவம்’, ‘மூலவர்’, ‘பிரபை’, ‘ஞானம்’, ‘நைவேத்தியம்’, ‘பிரசாதம்’, ‘ஈசுவரன்’, ‘பிரதிஷ்டை’, ‘பிரம்மா’, ‘பஞ்சலோகம்’, ‘விஷ்ணு’, ‘விக்ரகம்’, ‘லக்ஷ்மி’, ‘ஆத்மா’, ‘சரஸ்வதி’, ‘விபூதி’, ‘குங்குமம்’, ‘திதி’, ‘கலசம்’, ‘மகோத்ஸவம்’, ‘பஞ்சாமிர்தம்’, ‘கும்பாபிஷேகம்’, ‘சுபம்’, ‘விரதம்’, ‘கும்பம்’, ‘நவக்கிரகம்’, ‘பிரதிமை’, ‘சனீஸ்வரன்’, ‘சாஷ்டாங்கம்’, ‘தீர்த்தம்’, ‘நவலோகம்’, ‘ஜலம்’, ‘அலங்காரம்’, ‘அஷ்டம்’, ‘அர்த்தஜாம பூஜை’, ‘தூபம்’, ‘அந்திம பூஜை’, ‘தூப தீபம்’, ‘தீட்சிதர்’, ‘அர்ச்சகர்’, ‘பாகவதர்’, ‘அர்ச்சனை’, ‘தேவன்’, ‘அஷ்டமி’, ‘நவமி’ என மிகப்பல வடமொழிச் சொற்கள் இன்றும் அன்றாட வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை மக்களின் இறை நம்பிக்கையைக் கால்கோளாகக் கொண்டு புகுத்தப்பட்டமையால், இன்னும் நீங்கா நிலையில் உள்ளன. சோதிடம் என்பது காலக்கணக்காகக் கருதப்பட்டாலும், இதனால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் மிகப்பலவாகும்.

‘ஜோசியம்’, ‘கிரகப்பிரவேசம்’, ‘ராகு’, ‘புத்தி’, ‘ஓரை’, ‘சகுனம்’, ‘சுக்கிரன்’, ‘அமாவாசை’, ‘கிருத்திகை’, ‘ஜென்மநட்சத்திரம்’, ‘பூராடம்’, ‘விருச்சிகம்’, ‘யோகம்’, ‘அபிஷேகம்’, ‘கஷ்டகாலம்’, ‘நட்சத்திரம்’, ‘திசை’, ‘லக்னம்’, ‘நிமித்தம்’, ‘திவசம்’, ‘பாட்டிமை’, ‘பஞ்சாங்கம்’, ‘போகம்’, ‘மகம்’, ‘தனுசு’, ‘சித்தம்’, ‘துலாம்’, ‘பஞ்சமிதிதி’, ‘ஜாதகம்’, ‘கிரகணம்’, ‘கேது’, ‘பலன்’, ‘விவாஹம்’, ‘ராசி’, ‘கேட்டை’, ‘அனுகூலம்’, ‘ஆயில்யம்’, ‘உத்திராடம்’, ‘மீனம்’, ‘துவாதசி’ இவ்வாறு சோதிடத் துறையால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் பலவாகும். இவையணைத்தும் மக்களின் சோதிட ஆர்வத்தைக் கால்கோளாகக் கொண்டு தமிழில் நுழைந்தவை.

திருமணத் தொடர்பாக வடசொற்கள் வருமாறு:-

‘கரணம்’, ‘சேவித்தல்’, ‘கங்கணம்’, ‘ஓமம்’, ‘அட்சதை’, ‘அருந்ததி’, ‘ஜானவாசம்’, ‘ஆசீர்வாதம்’, ‘மாங்கல்யம்’, ‘பிரகாரம்’, ‘விவாக சுபமுகூர்த்தம்’.

தமிழ் ஆண்டுகள் என்று பெருவழக்காகச் சொல்லப்படும் அறுபது ஆண்டுகளும், ஆண்டில் பன்னிரு மாதங்களும் வடமொழிச் சொற்களே. கிழமைகளாக வழங்கப்படுபவற்றுள்ளும் பெரும்பான்மையின வடமொழிச் சொற்களே. அன்றாட வாழ்வில் இவற்றை வழங்காமல் நீக்குவது எளிதானதல்ல. நம்பிக்கை வழியாக மட்டுமின்றி, வடமொழியாளர் தொடர்பால் புகுந்த ஏராளமான சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
நகர்ப்புறங்களில் ஆங்கிலக் கலப்பு இருந்து வருவதால், வடமொழிக் கலப்புக் குறைகிறது. ஆங்கிலத்தின் வரவால் வடமொழி மறைவதில் தமிழுக்குப் பயன் விளையாது.

பிறமொழிகள் இரண்டும் கலப்பு நிகழ்த்தும் நிலையில்தான் தமிழின் அன்றாட வழக்கு இயங்கி வருகிறது என்பதைக் கருத வேண்டும்.

‘அக்ரகாரம்’, ‘அகடவிகடம்’, ‘அகந்தை’, ‘அகிம்ஸை’, ‘அங்கஹீனம்’, ‘அங்கீகாரம்’, ‘அசந்தர்ப்பம்’, ‘அசாதாரணம்’, ‘அசுரன்’, ‘அசெளக்கியம்’, ‘அட்டகாசம்’, ‘அத்தியாவசியம்’, ‘அதிசயம்’, ‘அதிபர்’, ‘அதோகதி’, ‘அந்திமம்’, ‘நாமம்’, ‘அநியாயம்’, ‘அப்பிராணி’, ‘அபத்தம்’, ‘அபிப்பிராயம்’, ‘அம்சம்’, ‘அமங்கலம்’, ‘அயோக்கியன்’, ‘அரிதாரம்’, ‘அவகாசம்’, ‘அவதாரம்’, ‘அவஸ்தை’, ‘அக்ரமம்’, ‘அகதி’, ‘அகஸ்மாத்து’, ‘அகிலம்’, ‘சேஷ்டை’, ‘அசடு’, ‘அனந்தகோடி’, ‘அசிங்கம்’, ‘அசுத்தம்’, ‘நமஸ்காரம்’, ‘அத்தாட்சி’, ‘தர்மம்’, ‘அதிபதி’, ‘அதிர்ஷ்டம்’, ‘அந்தரங்கம்’, ‘அந்நியன்’, ‘அநாமதேயன்’, ‘அநீதி’, ‘அபகரித்தல்’, ‘அபயம்’, ‘அபாண்டம்’, ‘அபிவிருத்தி’, ‘அம்பிகை’, ‘அமிர்தம்’, ‘அர்த்தபுஷ்டி’, ‘அலங்காரம்’, ‘அவசரம்’, ‘அவதானம்’, ‘அக்கினி’, ‘அக்கினிப் பிரவேசம்’, ‘அகாலம்’, ‘அகோரம்’, ‘வஸ்திரம்’, ‘சந்தர்ப்பம்’, ‘அசம்பாவிதம்’, ‘அஜீரணம்’, ‘செளக்கியம்’, ‘அட்சதை’, ‘அத்தியாயம்’, ‘அதர்மம்’, ‘சதிபதி’, ‘அதிருப்தி’, ‘அந்தஸ்து’, ‘அநாதை’, ‘அபிஷ்டு’, ‘அப்பாவி’, ‘அபசாரம்’, ‘அபராதம்’, ‘அபாயம்’, ‘அபூர்வம்’, ‘அம்புஜம்’, ‘அமோகம்’, ‘அர்த்தம்’, ‘அலட்சியம்’, ‘அவசியம்’, ‘அவலட்சணம்’ எனப்பல வடமொழிச் சொற்கள் அன்றாட வழக்கில் மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப வருதலை அறியலாம்.

எனவே, தமிழில் கலந்த பிறமொழிச் சொற்களில் வடமொழியே முதன்முதலில் மிகுதியான சொற்களைக் கலந்தது . வடமொழியோடு நெருங்கிய தொடர்புடையன பிராகிருத மொழிகளாகும்.
தமிழும் பிராகிருதமும் என்ற கட்டுரையில் ‘அக்கி’, ‘அத்தம்’, ‘இசை’, ‘உவச்சன்’, ‘ஊராண்மை’, ‘ஐயர்’, ‘ஓமாலிகை’, ‘கப்பம்’, ‘கண்ணன்’, ‘கலுழன்’, ‘காமம்’, ‘கோட்டி’, ‘சதுக்கம்’, ‘சிட்டன்’, ‘சுண்ணம்’, ‘தக்கினம்’, ‘தம்பலம்’, ‘தயிர்’, ‘தலைவர்’, ‘தானம்’, ‘திட்டி’, ‘துவை’, ‘தூசு’, ‘தொடி’, ‘நேயம்’, ‘படிமை’, ‘பள்ளி’, ‘பளிங்கு’, ‘பாயிரம்’, ‘பிசைமட்டம்’, ‘மயானம்’, ‘முத்து’, ‘மையம்’, ‘வயிரம்’, ‘விஞ்சை’ முதலிய சொற்களைப் பேராசிரியர் வையாபுரியார் பிராகிருதம் எனப் பட்டியலிட்டுள்ளார்.
வைதிக சமயத்தால் வடசொற்களும், சமண சமயத்தால் பிராகிருதச் சொற்களும், பெளத்த சமயத்தால் பாலி மொழிச் சொற்களும் பல கலந்தன என்றும் கூறினார்.

Tetanus என்றால் என்ன?


#Tetanus

“டெட்டனஸ்” என்றால் என்ன? – விழிப்புணர்வு பதிவு..!!

காயம் ஏற்பட்டால், ஊரில் பலர் உடனே சொல்லும் வாக்கியம் ஒரு டி.டி. இன்ஜெக்ஷன் போடு என்பது தான்.

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கவல்ல நோய், டெட்டனஸ் (Tetanus). இழுப்புநோய், வில்வாத ஜன்னி, வாய்ப்பூட்டு நோய், ரணவாத ஜன்னி, நரம்பிசிவு நோய் என்று இந்த நோய்க்குப் பல பெயர்கள் உள்ளன. ‘கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி’ (Clostridium tetani) என்ற பாக்டீரியா கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது. மனித மலம், விலங்குகளின் சாணம், துருப்பிடித்த உலோகப் பொருட்கள் போன்றவற்றில், இந்தக் கிருமி உயிர் வாழும். சூரிய ஒளி, அதிக வெப்பம், அதிகக் குளிர்ச்சி, பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றால் அழிந்து விடும் என்பதால், முழுக் கிருமியாக இதனால் வெகுகாலம் உயிர் வாழ முடியாது. எனவே, இவை எதுவும் தம்மை அழித்து விடாதபடி, தம் மேல் ஒரு பாதுகாப்பு உறையை உற்பத்தி செய்து ‘டெட்டனஸ் சிதில்களாக’ உருமாறிக் கொண்டு, இவை வெகுகாலம் உயிர் வாழ்கின்றன.

*நோய் வரும் வழி..*

காற்று மற்றும் ஈக்கள் மூலம் இந்தக் கிருமி பரவுகிறது. திறந்த காயத்தின் வழியே, இது உடலுக்குள் நுழைவது ஒரு பொதுவான வழி. தவிர, முள், துருப்பிடித்த ஆணி, கம்பி, ஊக்கு போன்றவை குத்தும் போது, அவற்றின் வழியாகவும் உடலுக்குள் நுழைந்து விடும். அடுத்து, தொற்று நீக்கம் செய்யப்படாமல் போடப்படும் ஊசிகள், சுத்தமற்ற கருச்சிதைவுகள், கவனக் குறைவாகச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றின் மூலமும் இந்தக் கிருமி உடலுக்குள் புகுந்து கொள்ளும். நகச்சுற்று, சொறிசிரங்கு, தீக்காயம், செவியில் சீழ் வடிதல், தொப்புள்கொடிப் புண், செருப்புக்கடி, சூடுபோடுதல், பச்சைகுத்துதல் போன்றவை இந்தக் கிருமியின் வேறு சில நுழைவாயில்கள்.

காயம் அல்லது புண்ணில் புகுந்து கொண்ட கிருமிகள் அங்குள்ள திசுக்களை அழிக்கும். சீழ்பிடிக்க வைக்கும். அப்போது புறநச்சுப் பொருள் (Exotoxin) ஒன்றை வெளி விடும். இது தான் ஆபத்தானது. இது மூளைக்குச் சென்று, நரம்புத் திசுக்களை அழிக்கும். இதனால் உடலில் தசை இயக்கங்கள் பாதிக்கப்படும்.

*அறிகுறிகள்*

வாயைத் திறக்க முடியாது. கழுத்தை அசைக்க முடியாது. திடீரென்று முதுகு வில் போல் வளையும். வயிறு மரப்பலகை போல் இறுகி விடும். கைகால் தசைகள் விறைத்துக் கொள்ளும். நோயாளியின் உடலில் வெளிச்சம் பட்டால், உடனே வலிப்பு வரும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உயிர் இழப்பும் ஏற்படலாம்.

*டெட்டனஸ் தடுப்பூசி*

டெட்டனஸ் நோயால் ஏற்படுகிற மரணத்தைத் தவிர்க்க ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ (Tetanus Toxoid) என்ற தடுப்பூசி உள்ளது. வீரியம் குறைக்கப்பட்ட டெட்டனஸ் நச்சுப் பொருளிலிருந்து (Inactivated tetanus toxin) இது தயாரிக்கப் படுகிறது. காயம் அடைந்த அனைவருக்கும் இது போடப்படுகிறது. தவிர, டி.டி.டபிள்யூ.பி (DTWP), டி.டி.ஏ.பி (DTAP), டி.டி.ஏ.பி (TDAP), டி.டி (TD) தடுப்பூசிகளும் இந்த நோயைத் தடுக்க உதவுகின்றன.

*தடுப்பூசி போடப்படும் முறை*

குழந்தைகளுக்கு ஒன்றரை, இரண்டரை மற்றும் மூன்றரை மாதங்கள், ஒன்றரை வயது, ஐந்து வயது முடிந்தவுடன் டி.டி.டபிள்யூ.பி (DTwP) அல்லது டி.டி.ஏ.பி (DTaP) தடுப்பூசியைப் போட்டிருந்து, அடுத்து 10 வயதில் டி.டி.ஏ.பி (Tdap) அல்லது டி.டி (Td) போட்டிருந்தால், அதற்குப் பிறகு 10 வருடங்களுக்கு ஒருமுறை டி.டி (Td) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு தவணையிலும் போடாதவர்களும், ஒன்றிரண்டு தவணைகளை மட்டுமே போட்டுக் கொண்டவர்களும், அடுத்து எப்போது போடுகிறார்களோ அப்போது டெட்டனஸ் டாக்சாய்டு அல்லது டி.டி. (Td) தடுப்பூசியை ஆரம்ப நாளில் முதல் தவணையும், ஒரு மாதம் இடைவெளி விட்டு இரண்டாம் தவணையும், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாம் தவணையும் போட்டுக் கொள்ள வேண்டும். இதன் அளவு அரை மில்லி. புஜத்தில் தசை ஊசியாகச் செலுத்த வேண்டும்.

*டெட்டனஸ் தடுப்புப் புரதம்*

டெட்டனஸ் நோயைத் தடுக்க ‘டெட்டனஸ் தடுப்புப் புரதம்’ (Tetanus immunoglobulin) ஒன்றும் உள்ளது. இது டெட்டனஸ் கிருமிகள் வெளிக் காயத்திலிருந்து உடலுக்குள் நுழைவதற்கு முன்பே அவற்றை அழித்து விடும் தன்மை உடையது. காயம் மிகப் பெரிதாக இருக்கும் போது, இதைப் போட வேண்டும். குழந்தைகளுக்கு 250 யூனிட் என்ற அளவிலும் பெரியவர்களுக்கு 500 யூனிட் என்ற அளவிலும் புஜத்தில் தசை ஊசியாகச் செலுத்த வேண்டும்.

*காயம் பட்டவுடன் செய்ய வேண்டியவை*

காயம்பட்ட இடத்தில் சோப்பு போட்டு, வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் குறைந்தது 10 நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும். காயத்தின் மீது பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் போன்ற ஏதாவது ஒரு ஆன்டிசெப்டிக் மருந்தைத் தடவலாம். பெரிய காயமாக இருந்தால் காயத்துக்குக் கட்டுப் போடலாம். காயம் மிகப் பெரிதாக இருக்குமானால், டெட்டனஸ் தடுப்புப் புரதம் போடப்பட வேண்டும். காயம் குணமாக தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளையும் சாப்பிட வேண்டும். டெட்டனஸ் டாக்சாய்டு அல்லது டி.டி.ஏ.பி (TDAP) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

*கர்ப்பிணிகளுக்குப் போடப்படும் முறை*

பிரசவத்தின் போது ‘டெட்டனஸ் நோய்’ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதைத் தவிர்ப்பதற்காக டெட்டனஸ் டாக்சாய்டு அல்லது டி.டி.ஏ.பி (Tdap) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். முதல் முறை கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் முதல் தவணையாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து இரண்டாம் தவணையைப் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி இரண்டாம் தவணையைப் போடத் தவறியவர்கள், பிரசவத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாவது, இரண்டாம் தவணையைப் போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயம். இரண்டாம் முறை கர்ப்பம் தரிக்கும் போதும் இதே போல் இரண்டு தவணைகள் போட்டுக் கொள்ள வேண்டும்.

*சிகிச்சை என்ன?*

டெட்டனஸ் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டும். வெளிச்சம் அதிகம் இல்லாத, அமைதியான தனி அறையில் இவர்களுக்குச் சிகிச்சை தரப்படும். ‘ஆன்டி டெட்டனஸ் சீரம்’ (Anti tetanus serum – ATS) என்ற நச்சு முறிவு ஊசி மருந்து செலுத்தப்படும். தசை இறுக்கத்தைக் குறைக்கவும், உறக்கத்துக்கும் மருந்துகள் தரப்படும். டெட்டனஸ் கிருமிகளை அழிப்பதற்கான பென்சிலின் போன்ற ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் தரப்படும்.

*தேவை விழிப்புணர்வு*

பெரும்பாலும் கிராமப்புற மக்களையும் நகர்ப்புற சேரிவாழ் மக்களையும் தான் டெட்டனஸ் நோய் அதிகம் தாக்குகிறது. விவசாயக் கூலிகள், தோட்டத் தொழிலாளர்கள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், நடைபாதைவாசிகள் பலரும் இந்த நோய்க்குப் பலியாகின்றனர். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிக முக்கியம். குறிப்பாக, சுத்தமாக இருப்பதின் அவசியத்தை உணர்த்த வேண்டும். காயம் பட்டவுடன் தடுப்பூசி போட வேண்டும் என்ற உணர்வை ஊட்ட வேண்டும். எந்த ஒரு காயத்தின் மீதும் சாம்பல், விபூதி, சாணம், சேறு, செம்மண், பேனா மை போன்றவற்றைப் பூசக்கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு நாள் = 24 மணி நேரம்

ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது எப்படி வந்தது தெரியுமா….?

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘டோத்’ என்ற கணித மேதை மெட்ரிக் காலண்டரை உருவாக்கினார்.

அதில் ஒரு மாதத்தை மூன்று பத்து நாட்களாகப் பிரித்து ஒரு நாளை 10 மணி நேரமாக ஆக்கினார்.

அதில் ஒரு மணி நேரம் என்பதை 100 நிமிடங்களாகக் கணக்கிட்டார்.

இப்படி வரும் பொழுது தொடர்ந்து நடுஇரவு கிடைத்தது. ஒரு லட்சம் வினாடிகள்,…

இக்காலத்தில் 24 மணி நேரம் கொண்ட ஒரு நாள் 86 400 வினாடிகள் மட்டுமே உள்ளன. காலப்போக்கில் இந்த மெட்ரிக் நாட்காட்டியை பின்பற்றாமல் போகவே விழா பண்டிகைகள் சரிவர கொண்டாட முடியாமல் போனது.

பிறகு இரவு பகலை 12 மணிகளாகப் பிரித்து 24 மணி நேரம் கொண்டு வரப்பட்டது.

முன்பு மெசபடோமிய மக்கள் அறுபதின் மடங்கை வரையறுத்து அதையும் பயன்படுத்தினர்.

எகிப்திய கோயிலில் 3500 ஆண்டுகளுக்கு முன் காலத்தை உணர்த்தும் நீர்க் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

ஒரு நாளின் கூறுகளாக அதிகாலை, மத்தியானம், பிற்பகல், சாயங்காலம், முன் இரவு, நடுநிசி, பின்னிரவு, பிரம்ம முகூர்த்தம் என கால அடிப்படையில் ஒரு நாளை பத்து ஜாமங்களாகப் பிரித்தனர்.

பகல் 5…
இரவு 5 ஜாமங்கள்…

காலை 6 முதல் 8.24 நிமிடம் வரை முதல் ஜாமம்…
8.25 முதல் 10.48 வரை இரண்டாம் ஜாமம்.
10.49 முதல் பிற்பகல் 1.12 வரை மூன்றாம் ஜாமம்,…
1.13 முதல் பிற்பகல் 3.36 வரை நான்காம் ஜாமம்…
3.37 முதல் மாலை 6 மணி வரை ஐந்தாம் ஜாமம்.
இதே வரிசையின்படி இரவிலும் கணிக்கப்பட்டன.

1 நாழிகை = 24 நிமிடம்

2 1/2 நாழிகை = 1 மணி

3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்

7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்

4 ஜாமம் 1 பொழுது..

2 பொழுது 1 நாள்… தற்கால 24 மணி நேர அளவு….

இதெல்லாம் ஏன் சொல்றேனா
நைட்டு 12 மணிக்கும்…
1 மணிக்கும் காலை வணக்கம்னு
சொல்றாங்கப்பா…..😜
இனி சொல்லக்கூடாதுல…. 😂

சட்டம் அறிந்து கொள்வோம்

பெண்களுக்கு முழு சொத்துரிமை

பெண்களுக்கும் சொத்தில் முழு உரிமை உண்டு என்று தீர்ப்பு வந்து விட்டது. அதனால் சொத்துரிமை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் பதிவிட்டுள்ளோம்.

ஒருவரின் சொத்து இருவகையாக எடுத்துக் கொள்ளலாம் ஒன்று சுய சம்பாத்திய சொத்து மற்றொன்று பூர்வீகச் சொத்து

Q – சுயமாக சம்பாதித்த சொத்து என்றால் என்ன?

ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் யாருடைய தயவுமின்றி சுயமாக சம்பாதித்து வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்துமே அவரது சுய சம்பாத்திய சொத்துக்களாகும்.

Q- சுயசம்பாத்தியச் சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு கொடுக்கவேண்டும் ?

சுயமாக சம்பாதித்த சொத்தில் யாருக்கு பங்கு கிடையாது. சுயசம்பாத்திய சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

Q – பூர்வீகச் சொத்து பற்றி சொல்லுங்க ?

ஒருவர் தனது வாழ்நாளில் சுயமாக சம்பாதித்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை யாருக்கு கொடுக்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்று எந்தவித ஏற்பாடும் செய்யாமல் அல்லது உயில் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் பூர்வீகச் சொத்துக்கள் ஆகும்.

Q – இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த முதல் மாநிலம் எது ?

1986ம் வருடம் ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் என் டி ராமாராவ் அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படவேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்தார், அதை தொடர்ந்து 1989ம் ஆண்டு தமிழகத்திலும், அதன் பின் மஹாராஷ்டிராவிலும். 2005ம் ஆண்டு முதல் இந்திய முழுவதும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.

Q – இப்போ வந்துள்ள தீர்ப்பின் படி உயிருடன் இருக்கும் தந்தையின் சுய சம்பாதித்த சொத்தில் பெண் பிள்ளைகள் பங்குகேட்க முடியுமா?

மூதாதையரின் சொத்து தந்தை வசம் இருந்தால் மட்டுமே வாரிசுகள் பங்கு கேட்க முடியும், தந்தை சுயமாக சம்பாதித்த சொத்து என்றால் பங்கு கேட்க முடியாது.

Q – கடன் வாங்கி வைத்துவிட்டு தந்தை இறந்துவிடுகிறார் அந்த கடனை பெரும்பாலும் மகன் தான் திரும்ப செலுத்துகிறார்? மகளுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறதா?

உண்மை தான் இதைப்பற்றி பல மாறுபட்ட தீர்ப்புகள் உள்ளது. பொதுவாக கடன் வாங்கிவைத்துவிட்டு தந்தை இறந்துவிடுகிறார் என்றால் தந்தையின் சொத்தை ஏலம் விட்டு வங்கிகள் வசூலித்து விடும். தந்தையின் சொத்து தங்களுக்கு வேண்டும் என்று வாரிசுகள் விரும்பினால் அந்த கடனை திரும்ப செலுத்திவிட்டு சொத்தை பிரித்துக்கொள்ளலாம்.

Q – தந்தை பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் வாங்கிவைத்துவிட்டு இறந்துவிடுகிறார்? அவர் பெயரில் எந்த சொத்துக்களும் இல்லை?

தந்தை தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு வழியாக கடன் வாங்கி அதை காட்டாமல் இறந்துவிடுகிறார், இதில் இறந்தவரின் மனைவி, தாய், தந்தை, மகன், மகள் என் அனைவர்க்கும் சட்டப்படி அவரின் கடனை திருப்பி செலுத்தும் உரிமை இல்லை என்றாலும் கடனை திரும்ப செலுத்தும் தார்மீக பொறுப்பு இவர்களுக்கு உள்ளது. எனவே வாங்கி அவர் யாரை வாரிசுதாரராக நியமித்துள்ளாரோ அவரிடம் கடனை திருப்பி செலுத்தும்படி கேட்கலாம்.

Q – 2005-திற்கு முன்பு பிறந்த பெண் குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு உண்டா?

ஆம் உண்டு.

Q – 2005-திற்கு முப்பு தந்தை இறந்துவிடுகிறார் அவரது சொத்தில் பெண் குழந்தைகளுக்கு பங்கு உண்டா?

ஆம் உண்டு.

Q – 2005-திற்கு முன் ஆண்வரிசுகள் பூர்விக சொத்தை விற்றுவிட்டார்கள், பெண் குழந்தைகள் பங்கு கேட்க முடியுமா?

இனிவரும் காலங்களில் இது போன்ற பல பிரச்சனைகள் வரவாய்ப்பிருக்கிறது, மூதாதையரின் சொத்தை ஆன் வாரிசும் விற்பனை செய்துவிட்டால் பெண்வாரிசுகள் ஆன் வாரிசுகளிடம் பங்கு கேட்கலாம்.

Q – ஆண்வாரிசுகள் பூர்விக சொத்தை விற்ற பணத்தில் தமது மனைவி குழந்தைகள் பெயரில் வேறு சொத்து வாங்கிவிட்டார்கள் அது பூர்வீக சொத்தா?

பூர்வீக சொத்தை விற்று வாங்க படும் அணைத்து சொத்துகளும் பூர்வீக சொத்தாகவே கருதப்படும், பூர்வீக சொத்தை அனுபவிப்பவர்கள் அந்த சொத்தின் கர்த்தா அல்லது மேலாளர் மட்டுமே அந்த சொத்தின் உரிமையாளர் கிடையாது.

Q – சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டார் நான் சுயமாக சம்பாதித்து என்னுடன் பிறந்த ஆறு சகோதரிகளுக்கு திருமணம் செய்துவைத்தேன்? இப்பொழுது அவர்கள் எனது தந்தையின் சொத்தில் பங்கு கேட்கிறார்கள்?

இது சற்று சிரமமான கேள்விதான், சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பங்கு உண்டு, தார்மீக அடிப்படையில் அவர்கள் உங்களுக்காக சொத்தை விட்டுத்தர வேண்டும் அவர்களிடம் பேசி பாருங்கள்.

Qஎனக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரே மகன், மூன்று பெண்குழந்தைகளுக்கு என் தகுதிக்கு மீறி சீர் செய்து அவர்களுக்கு திருமணம் முடித்துவிட்டேன், எனது மகன் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறான், அவனுக்கு எனது சொத்தை எழுதித்தர விரும்புகிறேன் அனால் சொத்தை வாங்கிக்கொண்டு என்னை கவனிக்காமல் விட்டுவிடுவானோ என்ற பயம் இருக்கிறது?

நீங்கள் சுயமாக சம்பாதித்த சொத்து என்பதால் நீங்கள் விருப்பப்பட்டவர்களுக்கு எழுதி வைக்கலாம், உங்கள் காலத்திற்கு பின் உங்கள் சந்ததிகள் அனுபவிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உயில் எழுதி அதை பதிவுசெய்து வைத்துவிடுங்கள். உங்கள் காலத்திற்குப்பின் நீங்கள் விரும்பியவருக்கு உங்கள் சொத்து கிடைத்துவிடும்.

Q – பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

பெற்றோர்களே உங்கள் காலத்திலேயே உங்கள் சொத்துக்களை யாருக்கு என்ன தரவேண்டும் என்பதை பிரித்துக்கொடுத்துவிட்டு உங்களுக்கென்று ஒரு சிறுதொகையை வைத்துக்கொள்ளலாம்.

பிள்ளைகள் பாகப்பிரிவினையின் போது பிரச்சனை செய்வார்கள் என்று நீங்கள் கருதினால் சுயநினைவு இருக்கும்போதே உயில் எழுதிவைத்துவிடுவது மிகவும் நல்லது.

தங்கள் சொத்துக்களை எதுவுமே செய்யாமல் விட்டுவிட்டு செல்லும்போது அதற்காக உங்கள் சந்ததியினர் சண்டை போட்டு வெட்டு குத்து அடி தடி ஏன் கொலை வரை சென்று விடுகிறார்கள்..
சிலசமயம் சொத்துக்களை பிரிக்கமுடியாமல் அந்த சொத்து எவருக்கும் பயன்படாமல் போய்விடுகிறது.

உங்கள் சந்ததியினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று எண்ணினால் கண்டிப்பாக உங்கள் காலத்திற்கு முன் உங்கள் சொத்து யாருக்கு சேரவேண்டும் என்பதை தெளிவாக ஏற்பாடு செய்துவிட்டு செல்லுங்கள்.

சிறுகதை – சுயம்.

சிறுகதை!

சுயம் – புரிதல்


வீட்டுக்குள் நுழையும் போதே அங்கிருந்த அதீத அமைதி, ஏதோ சரியில்லை என்பதை வாசுவுக்கு உணர்த்தியது தங்கள் அறையில் புத்தக குவியல்களின் மத்தியில் சரிந்து, அப்படியே தூங்கியிருந்த மனைவியைக் கண்டதும், வாசுவின் உதட்டில் மெல்லிய புன்னகை அரும்பியது அம்மாவிடம் கோபித்துக் கொண்டு சுருண்டு படுத்திருக்கும் பிள்ளை போன்ற அவளின் தோற்றம், அப்படியே அள்ளிக் கொள்ள சொல்லியது. ஆனால் தூங்குபவளை எழுப்ப மனமின்றி, மௌனமாய் வெளியேறினான் சிறிது நேரத்திற்கு பின், “தூங்கினா எழுப்ப மாட்டீங்களா? தொல்லை விட்டதுனு நிம்மதியா இருந்துப்பீங்க இல்ல” என்றவளின் குற்றம் சாட்டும் குரலில், கணினியில் இருந்து பார்வையை திருப்பியவன், அருகில் வா என செய்கை செய்தான் “ஏன்? வா’னு வாய தெறந்து கூப்பிட்டா முத்து உதுந்துடுமா? அதென்ன ஜாடைல பேசறது” என்றாள் எரிச்சலுடன் “மேடம் இன்னிக்கி நல்லா சண்டை போடற மூட்ல இருக்கீங்க போல?” என வாசு சிரிப்புடன் கேட்க “ஆமா, என்னைப் பாத்தா எல்லாருக்கும் இளக்காரம் தான்” எனும் முன் கண்ணில் நீர் துளிர்க்க, மீண்டும் அறைக்குள் திரும்பிச் சென்றாள் ராதிகா.

அதற்கு மேல் அமைதியாய் அமர்ந்திருக்க மனமின்றி, எழுந்து மனைவியின் பின்னோடு சென்றான் வாசு முழந்தாலிட்டு அமர்ந்து அதில் முகத்தை புதைத்து இருந்தவளைக் கண்டதும், மனம் இளக ஆதரவாய் அணைத்தபடி அருகில் அமர்ந்தான் கணவனின் அணைப்பில், இன்னும் முறுக்கிக் கொண்டவள், அவனை விலக்கினாள் குழந்தையாய் கோபிப்பவளை ரசித்தவன், மெல்லிய புன்னகையுடன் மனைவியின் தாடையை பற்றி உயர்த்தி, “என் ராதிக்கு என்ன கோபம் இப்போ?” என்ற கேள்விக்கு, அவளிடமிருந்து மௌனமே பதிலாய் கிடைத்தது “இங்க பாரு ராதி, எதுவானாலும் மனசு விட்டு பேசுனு சொல்லியிருக்கேன் இல்லையா? இப்படி நீயும் டென்சன் ஆகி என்னையும் டென்சன் பண்ணினா என்ன அர்த்தம்?” என சற்றே குரலை உயர்த்தினான் வாசு, தன்னை வருத்திக் கொள்கிறாளே என்ற கோபத்துடன் “ஆமா, என்னால யாருக்கும் நிம்மதி இல்ல, பிரச்சன தான்” என ராதிகா விசும்ப “ஏய்… யாரு அப்படி சொன்னது? அதெல்லாம் இல்லடா.

அவுட் வித் இட், என்னனு சொல்லு ராதிம்மா” என்றான் சமாதானமாய், மனைவி அழுவது சகியாதவனாய் “நான் சொன்னா நீங்க கிண்டல் தான் பண்ணுவீங்க, லீவ் மீ அலோன்” என விலகினாள் “என்னடா இது, நீ இப்படி டென்சனா இருக்கும் போது நான் கிண்டல் பண்ணுவேனா?” என மெல்ல அவள் கையை எடுத்து தன் கைக்குள் புதைத்தவாறே கேட்டான் வாசு அந்த செய்கை அவளை நெகிழச் செய்ய, மெல்ல அவன் தோளில் சாய்ந்தவள், “எனக்கு யார் கூடவும் பேசப் பிடிக்கல, யாரையும் நம்ப முடியல. எல்லாரும் வேஷம் போடறாங்களோனு தோணுது. ஏம்ப்பா இப்படி?” என்றாள் வருத்தத்துடன் “யாரை பத்தி பேசறேனு புரிஞ்சா தான என்னோட ஒபினியன் சொல்ல முடியும் ராதி” என்றான் அவள் வருத்தத்தின் முழு அர்த்தம் விளங்காதவனாய் “எல்லாருமே அப்படித்தான் இருக்காங்க.

என் கூட பேசற பழகற எல்லாருமே, தேவைனா பேசறாங்க, தேவை தீந்தா யாரோ மாதிரி நடந்துக்கறாங்க. இன்னைக்கிக் கூட அப்படித் தான், என் கூட வேலை செய்யற அனிதா உங்களுக்கு தெரியும் தானே. ஆரம்பத்துல நான் எல்லார்கிட்ட மாதிரி தான் அவகிட்டயும் இருந்தேன். அவளே வந்து இழுத்து வெச்சு பேசினா, ரெம்ப க்ளோசா பழகினா. சரினு நானும் அதேப் போல பழக ஆரம்பிச்சேன். இப்ப திடீர்னு அவ எனக்கும் அவளுக்கும் சம்மந்தமில்லாத மாதிரி நடந்துக்கறா. ஏன் இப்படி?” “இதுக்கு ஏன் நீ டென்சன் ஆகற? அவளுக்கு நீ தேவை இல்லைனா உனக்கும் அவ தேவை இல்லைனு போக வேண்டியது தான” “அதெப்படிங்க அப்படி சட்டு சட்டுனு மனச மாத்திக்க முடியும்” “பின்ன, நீ என் பிரெண்டா தான் இருக்கணும்னு போராட்டம் நடத்தப் போறியா? லூசு” என சிரித்துக் கொண்டே வாசு செல்லமாய் அவள் தலையில் கொட்ட “இதான்… இதான் சொன்னேன், கிண்டல் பண்ணுவீங்கனு. ச்சே… விடுங்க” என ராதிகா விலக “ப்ச்… இதுதான் நீ என்னை புரிஞ்சுக்கற லட்சணமா? நான் என்ன சொல்ல வரேன்னா, உன்னை வேண்டாம்னு ஒருத்தங்க விலக்கினா, அது அவங்களுக்கு தான் நஷ்டம்னு அவங்களுக்கு புரியலைனு அர்த்தம்” என மனைவிக்கு புரிய வைக்க முயன்றான் வாசு “ஆனா இவ மட்டும் இல்லங்க, நிறைய பேர் இப்படித் தான் இருக்காங்க.

நல்லாப் பேசினா, உடனே நம்மள சீப்பா பாக்கறாங்க. நல்லா பேசிப் பழகறதுல என்னங்க தப்பு. அப்ப பந்தாவா மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு இருந்தா ரெம்ப புத்திசாலினு அர்த்தமா? நானும் அப்ப எல்லாரோடவும் அளவா வெச்சுக்கணுமா?” என புரியாமல் கேட்டாள் ராதிகா “அப்படி இல்லடா, சிலரோட மென்டாலிட்டி அப்படி. மத்தவங்களுக்காக உன்னோட நேச்சரை நீ ஏன் மாத்திக்கணும்னு நினைக்கற?” “வேற என்னங்க செய்யறது. சும்மா இருந்தாலும் இழுத்து வெச்சு பேசிட்டு, அதுக்கு நான் சொல்ற பதிலை மத்தவங்ககிட்ட போய் விமர்சனம் பண்றாங்க. எரிச்சலா இருக்கு” “ஜஸ்ட் இக்னோர் தம்” “அப்படி இருக்க முடியலங்க. அவங்க சுயநலத்துக்காக என்னை கேலி பொருள் ஆக்கறாங்கனு தோணுது. ஒருவேள என்கிட்ட தான் ஏதோ தப்போனு தோணுதுப்பா” என்றாள் பாவமாய் “என்ன ராதி நீ, எவ்ளோ கான்பிடென்டா இருப்பே, இப்ப இப்படி பேசறியே. உன்னோட திறமை / கெபாசிட்டி என்னனு உனக்கு தெரியாதா? ஆபீஸ்ல பெஸ்ட்னு பேர் வாங்கி இருக்க, அழகா பேசற, ரசனையா சமைக்கற, சமயத்துல டைம் மேனேஜ் பண்றதை நான் உன்னப் பாத்து தான் கத்துக்கறேன். யாருக்கு என்ன பிரச்சனைனாலும் முதல் ஆளா போய் ஆறுதல் சொல்ற, எந்த விஷயம்னாலும் மணிக்கணக்குல விவாதிக்கத் தெரியும் உனக்கு. எல்லாத்துக்கும் மேல அட்டகாசமா வரையற. பெரிய ஆர்டிஸ்ட் ஆகணும்னு லட்சியம் எல்லாம் வெச்சிருக்க.

இப்படி பேசினா எப்படி?” என்றான் கோபமாய், தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறாளே என்ற வருத்தத்தில் “ஆமா, Jack of all master of none” என்றாள் ராதிகா சலிப்பாய் “அப்படி இல்ல ராதி, சில சமயத்துல எனக்கே உன்னை பாத்தா பொறாமையா இருக்கும்” “சும்மா சமாதானம் பண்ணனும்னு சொல்றீங்க” என்றாள் நம்பாத குரலில் “அப்ப என் மேல நம்பிக்கை இல்லையா?” “அதில்லைங்க….” “நான் ஒண்ணு சொல்லட்டுமா, ஒரு ஒருத்தருக்காகவும் நீ உன்னை மாத்திக்கிட்டே இருந்தா, உன்னோட சுயம் காணாம போய்டும். ஒரு அளவுக்கு தான் ஊரோட ஒத்து வாழ முடியும். அதுவும் இப்படி பச்சோந்திதனமா இருக்கரவங்களுக்காக நீ உன்னை வருத்திக்க வேண்டிய அவசியமே இல்ல. இவங்கள பத்தி யோசிச்சு டென்சன் ஆகி நேரத்தை வீணடிக்கரத விட, அந்த நேரத்துல உனக்கு பிடிச்ச ஆர்ட் வேலையை செய். 10000 hours of practice makes a geniusனு ஒரு saying இருக்கு தெரியுமா அதாவது, நாம எதுல பெஸ்ட்னு நமக்கு நம்பிக்கை இருக்கோ, அதுல பத்தாயிரம் மணி நேரம் முழுசா செலவழிச்சா, நிச்சியம் அதுக்குள்ள சாதிச்சு இருப்போம்னு அர்த்தம். இப்படி ப்ரொடக்ட்டிவ் திங்கிங் இருக்கறவன் சாதிக்கறான், அதே மத்தவங்க விமர்சனங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கறவன் முன்னேறாமையே போயிடறான். இதான் வித்தியாசம். புரியுதா?” என சிறு பிள்ளைக்கு சொல்வது போல் பொறுமையாய் கூறினான் வாசு.

ராதிகா பதிலேதும் கூறாமல் யோசனையில் மூழ்க, யோசிக்கட்டும் என நினைத்தவன் போல், அவ்விடத்தை விட்டு அகன்றான் வாசு சிறிது நேரத்தில் கணவன் அருகே வந்து அமர்ந்தவள், சலுகையாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மனைவியின் முகம் சற்று தெளிந்திருப்பதை கண்டு மகிழ்ந்த வாசு, மௌனமாய் அணைப்பில் இணைத்துக் கொண்டான் அவளே பேசட்டும் என நினைத்தவனாய், மௌனமாய் தொலைக்காட்சியில் மூழ்கினான் “நீங்க சொன்னது ரெம்ப கரெக்ட்” என்றவளின் குரலில், தொலைக்காட்சியில் இருந்து பார்வையை விலக்கியவன் “ஆஹா… இன்னைக்கி மழை வரும், அதிசயமா நான் சொன்னது கரெக்ட்னு சொல்லிட்ட” என்றான் வாசு கேலியாய் “ப்ச்…” என பொய்யாய் சலித்தவள், “இனிமே தேவை இல்லாம டென்ஷன் ஆகறத விட்டுட்டு, Productiveஆ யோசிக்க போறேனு சொல்ல வந்தேன்” என்றாள் புது நம்பிக்கையுடன் “தட்ஸ் குட்… ஐ நோ யு ஆர் ஸ்மார்ட்” என பெருமையுடன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான் வாசு “தேங்க்ஸ்” என்றாள் ராதிகா மகிழ்வுடன் “அப்புறம் ராதி, நான் இன்னொண்ணு கூட சொன்னனே, அதுவும் கரெக்ட் தான?” என குறுஞ்சிரிப்புடன் வாசு கேட்க “என்ன?” என்றாள் ராதிகா புரியாமல் “உனக்கென்ன செலக்டிவ் அம்னீசியாவா? அதாம்மா, நீ லூசுனு சொன்னனே, அதுவும் கரெக்ட் தான?” என குறும்பாய் சிரித்தபடி கணவன் கேட்க “உங்கள…” என பொய் கோபத்துடன் டிவி ரிமோட்டை அவனிடமிருந்து பறித்து, வலிக்காமல் அடித்தாள் ராதிகா. “ஏய் ஏய்… கவுன்சலிங் பண்ணினதுக்கு இதான் பீஸா…ரெம்ப அநியாயம்” என்ற கணவனின் குற்றச்சாட்டுக்கு “ஆஹா, இவர் பெரிய டாக்டர், கவுன்சலிங்காம்… நெனப்பு தான்” பெருமிதமான பார்வையை அவன் மீது செலுத்தியபடியே, பொய்யாய் பழித்தாள் ராதிகா அதை ரசித்தவன், “என்னமோப்பா, பெரிய ஆளானப்புறம் இதையெல்லாம் மறக்காம இருந்தா சரி தான்” என வாசு வேண்டுமென்றே பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற “எதையும் மறக்க மாட்டேன்” என செய்கையால் உணர்த்துவது போல், மௌனமாய் கணவனின் அணைப்பில் தன்னை இணைத்துக் கொண்டாள் ராதிகா. வார்த்தைகளின் அவசியமற்ற அந்த புரிதலில், காதலுடன் மனைவியை தானும் அணைத்துக் கொண்டான் வாசு.

-சஹானா கோவிந்த்.

சட்டம் அறிந்து கொள்வோம்- FIR

*முதல் தகவல் அறிக்கை! (F.I.R. / எஃப்.ஐ.ஆர்)*

முதல் தகவல் அறிக்கை என்பது ஒரு குற்றவாளியின் விசாரணை மற்றும் தண்டனைக்கு வழிவகுக்கும் குற்றவியல் நடவடிக்கைக்கான முதல் படியாகும். வழக்கு வழக்கின் முழு கட்டமைப்பையும் கட்டியெழுப்புவதற்கான மிக முக்கியமான ஆதரவு சான்றுகள் இதுவாகும். எஃப்.ஐ.ஆரின் முக்கிய நோக்கம், பொலிஸ் நிலையத்தின் பொறுப்பான போலீஸ் அலுவலகத்திற்கு குற்றம் தொடர்பான விசாரணையைத் தொடங்குவதற்கும், விரைவில் ஆதாரங்களை சேகரிப்பதற்கும் ஆகும். இது குற்றத்தின் முதல் அறிக்கை, எனவே இது ஒரு மதிப்புமிக்க ஆவணமாகும், இது குற்றத்தின் மீது அதிக வெளிச்சத்தை வீசுகிறது. இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கற்பனையின்றி குற்றம் நடந்த உடனேயே ஒரு அறிக்கையாகும், பின்னர் எந்தவொரு வழக்கு விசாரணையும் முதல் அறிக்கையின் வெளிச்சத்தில் சரிபார்க்கப்படலாம்.

எஃப்.ஐ.ஆர் ஒரு முக்கியமான ஆவணம் என்றாலும் இது ஒரு ஆதாரமான ஆதாரம் அல்ல, ஆனால் சில சமயங்களில் அது வழக்கு வழக்கை பாதிக்கிறது. எனவே எஃப்.ஐ.ஆரின் சரியான பதிவு தேவை. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் நேரத்தில் கிடைக்கும் அளவுக்கு தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

வெளிப்பாடு, முதல் தகவல் அறிக்கை குற்றவியல் நடைமுறை 1973 இன் குறியீட்டில் வரையறுக்கப்படவில்லை, ஆனால் இந்த வார்த்தைகள் எப்போதுமே குற்றவியல் நடைமுறைகளின் கோட் பிரிவு 154 (1) இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட தகவல்களை அர்த்தப்படுத்துகின்றன . அது கொடுத்த தகவல்களின் உள்ளது அத்தியாவசிய ஒரு நடவடிக்கை குற்றச்செயலில் கமிஷன் அல்லது சந்தேகிக்கப்படும் கமிஷன் தொடர்பாக இணக்கமான அல்லது குற்றச்சாட்டு வடிவில் நிலையப் பொறுப்பாளர் போலீஸ் நிலையத்தின். குற்றவியல் சட்டத்தை இயக்கும் பொருளைக் கொண்டு இது வழங்கப்படுகிறது மற்றும் போலீஸ்சார் விசாரணையைத் தொடங்குகிறார்கள். இந்த அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) வழக்கின் அடித்தளமாக அமைகிறது.

கிரிமினல் நடைமுறையின் குறியீட்டின் பிரிவு 154 , 1973 அறியக்கூடிய குற்றத்தில் உள்ள தகவல்களைக் கையாள்கிறது. இந்த பிரிவின் படி, ஒரு போலீஸ் நிலையத்திற்கு பொறுப்பான ஒரு அதிகாரிக்கு வாய்வழியாக வழங்கப்பட்டால், அறியக்கூடிய குற்றத்தின் கமிஷன் தொடர்பான ஒவ்வொரு தகவலும், அவர் அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் எழுதுவதற்குக் குறைக்கப்படும், மேலும் தகவலறிந்தவர் மற்றும் இதுபோன்ற ஒவ்வொரு தகவலையும் படிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கப்பட்டால் அல்லது மேற்கூறியபடி எழுதப்பட்டதாகக் குறைக்கப்பட்டால், அது கொடுக்கப்பட்ட நபரால் கையொப்பமிடப்படும், மேலும் அதன் சார்பாக மாநில அரசு இந்த சார்பாக பரிந்துரைக்கக்கூடிய வடிவத்தில் அத்தகைய அதிகாரியால் வைக்கப்பட வேண்டிய புத்தகத்தில் உள்ளிடப்படும்.


இந்த நோக்கத்திற்காக பிரிவு 154 அது அத்தியாவசிய “பிடியாணையின்றி குற்றம்” பொருள் புரிந்து கொள்ள. குற்றவியல் நடைமுறை நெறிமுறையின் பிரிவு 2 (சி) இன் படி , ஒரு குற்றத்தை குறிக்கிறது, இதில் ஒரு காவல்துறை அதிகாரி, முதல் அட்டவணைக்கு ஏற்ப அல்லது வேறு எந்த சட்டத்தின் கீழும் அமல்படுத்தப்படலாம், உத்தரவாதமின்றி கைது செய்யப்படலாம்.

இதன் பொருள் புலனுணர்வு குற்றம் என்றால், காவல்துறை அதிகாரி ஒரு நபரை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியும்.

இந்த பிரிவில் உள்ள “ தகவல் ” என்ற வார்த்தையின் பொருள் புகார் அல்லது குற்றச்சாட்டின் தன்மை அல்லது விசாரணையின் பொருட்டு காவல்துறையை இயக்க வேண்டும் என்ற பொருளுடன் கொடுக்கப்பட்ட ஒரு குற்றத்தின் தகவல்.


நீதி விளக்கத்தின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர்: –

அறியக்கூடிய குற்றத்தின் ஆணைக்குழு தொடர்பான முதல் தகவல் அறிக்கை காவல்துறைக்கு வழங்கப்பட்டு பிரிவு 154 இன் கீழ் பதிவு செய்யப்படுகிறது .

க aus சா ஓரான் (1923) 2 பாட் .517 (சுருக்கமான விளக்கம்)

தகவல் என்ற சொல் இந்த வழக்கில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உள்ள தகவல் என்ற வார்த்தையின் பொருள், ஒரு குற்றத்தின் விசாரணையில் காவல்துறையினரால் பெறப்பட்ட தகவல்களிலிருந்து வேறுபடுவதைப் போல, விசாரணையின் பொருட்டு காவல்துறையை இயக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொடுக்கப்பட்ட புகாரின் தன்மை அல்லது குறைந்த பட்சம் குற்றத்தின் தகவல்.

கம்ருல் ஹுசன் ஏ.ஐ.ஆர் 1942 (சுருக்கமான விளக்கம்)

இந்த வழக்கில், காவல்துறையினருக்கு முதன்முதலில் வழங்கப்பட்ட தகவல்கள் தெளிவற்ற மற்றும் காலவரையற்ற தன்மையைக் கொண்டிருக்கும்போது, அது பிரிவு 154 இன் கீழ் வருவதாகக் கருத முடியாது, இதுபோன்ற சூழ்நிலைகளில் அவருக்கு வழங்கப்பட்ட மேலதிக தகவல்கள் நொடிக்குள் வரக்கூடும். 154


விஷ்ணு Vs மாநிலம் 1975 Cr.LJ 517 (சுருக்கமான விளக்கம்)

ஊழல் தடுப்பு வழக்கில் தகவல் அல்லது புகாரை பதிவு செய்வது எஃப்.ஐ.ஆர்

ஹலு AIR1974 SC.1936 (சுருக்கமான விளக்கம்)

குற்றவியல் நடைமுறைக் குறியீட்டின் பிரிவு 154 தனிப்பட்ட அறிவைக் கொண்ட நபரால் அறிக்கை வழங்கப்பட வேண்டும் என்று தேவையில்லை.

Nanku Vs State AIR 1973 (சுருக்கமான விளக்கம்)

தகவல் கொடுப்பவர் ஒரு கண் சாட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விசாரணையின் தொடக்கத்திற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட அனைத்து அறிக்கைகளும் பிரிவு .162 இன் கீழ் வருகின்றன என்பதில் சந்தேகமில்லை, விசாரணையின் போது காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையாக ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

சட்டம் அறிந்து கொள்வோம்- கூட்டு பட்டா.

யூடிஆர் (கூட்டு பட்டா) , கிராமநத்தம் , புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை…!

UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது, சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது, கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர் போன்ற பல ஆவண பிழைகளால் ஏற்படும் சிக்கல்கள் பல பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்றம் செய்தல் இலகு அல்ல, வீடுகட்ட அங்கீகாரம் கிடைப்பது கடினம்,  கடன் கிடைக்கபெறுவது கடினம், போன்ற பல சிக்கல்கள் எழும். இதனை வட்டாசிரியர் அலுவலகம் அணுகி சரி செய்தல் முறை.

UDR / கிராம நத்தம்/ FMB யில் திருத்தங்கள் செய்ய என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதின் நடைமுறை விளக்கம்.

முதலில் உங்கள் ஆவணத்தில் உள்ள பிழை என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், இதில் உங்களுக்கு தெளிவில்லை என்றால் அறிந்தவர்களிடம்  விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளுதல் அவசியம். என்ன தவறு, தவறுதலுக்கான காரணம் இவற்றை அறிந்து கொண்டால், இதனை சரி செய்தல் இலகுவாகும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை  அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக  எழுதுதல் வேண்டும். மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம்.

மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று  சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால்  மூலமாகவும் அனுப்பலாம். நேரிடையாக சென்று கொடுத்தால் அத்தாட்சி பெறுதல் விதிகளின்படி அரசு அலுவலகத்தில் இருந்து ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்)  பெற வேண்டும்.  உங்கள் மனுவில் பணியாளர் & நிர்வாக சீர்திருத்தம் சட்ட ஆணை 114 , 66, 89 கீழ் ஏற்பு ரசீது கொடுக்கும் படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை  அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக  எழுதுதல் வேண்டும்.

மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம். மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று  சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால்  மூலமாகவும் அனுப்பலாம்.

பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், பதிவு தபால் அத்தாச்சி வந்தவுடன், DRO அலுவலகம் நேரிடையாக சென்று தபால் பிரிவில் இருப்பவரிடம் மனுவின் நிலைமை, மற்றும் அதற்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு, உரிய நபரிடம் நகர்ந்து இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். தேவைபட்டால் DRO வை நேரிடையாக சந்திக்க வேண்டும்.

DRO அலுவலகத்தில் இருந்து, மேற்படி மனு, உங்கள் ஊர் வட்டாசியருக்கு FORWARD செய்யப்படும். பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், அதற்கான இன்னொரு நகல் கடிதம் நமக்கு வந்து சேரும் , அந்த கடிதம் கிடைத்தவுடன் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகம் நேரிடையாக சென்று அங்கு இருக்கும் தபால் பிரிவை அணுகி உங்கள் மனு ”எண்” ஆகிவிட்டதா என்றும், அது சம்பந்தப்பட்ட நபருக்கு சென்று விட்டதா என பார்த்துவிட்டு, தேவைபட்டால் துணை வட்டாட்சியர் , வட்டாட்சியரை சந்தித்து விவரங்களை சொல்ல வேண்டும்.

மேற்படி மனு வருவாய் ஆய்வாளருக்கு (RI) FORWARD செய்யப்படும். நாம் அவரை பின் தொடர்ந்து அதனை VAO க்கு வர வைக்க வேண்டும் . VAO வை நேரடியாக சந்தித்து கிராம கணக்கு விவரங்கள் , மற்ற கள விவரங்கள் பற்றி மனுவை ஒட்டி VAO விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தயார் செய்வர் . அப்பொழுது அவருக்கு தேவையான விவரங்களை நாம் தர வேண்டும்.

இதன்பின் இந்த மனுவானது, VAO விடம் இருந்து, RIக்கும், RI இடம் இருந்து வட்டாசிரியருக்கு அனுப்பப்படும். கூட்டுப்பட்டா  சிக்கல்கள் பட்டா மேல் முறையீடு அதிகரியிடமும், FMB சிக்கல்கள் தலைமை சர்வேயருக்கும் , கிராம நத்தம் பிரச்சனைகள் நத்தம் அலுவலகத்திற்கு செல்லும். பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு விசாரணை அழைப்பானை வரும்.

அழைப்பாணையில் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் ஆஜராகி விசாரணையில் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளித்து, தாங்கள் கொடுத்த பதில்களை ஆவணங்களாக உருவாக்கி உங்களிடம் கையெழுத்து பெற்று மேற்படி ரிப்போர்ட்களை DRO விற்கு அனுப்பி வைப்பார்கள்.

எந்த வித சிக்கலும் பிரச்சினைகளும் ஆட்சேபனைகளும் உங்கள் பிராதுக்களில் இல்லை என்றால் DRO உத்தரவு போட்டு உங்களுக்கு ஏற்ற நிவாரணம் செய்வார் . உங்கள் ஆவணங்கள் DRO உத்தரவு படி சரி செய்யப்படும். அதுவே ஆட்சேபனைகளும் சிக்கல்களும் எதிர்ப்புகளும் இருந்தால், மேற்படி மனு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்ற விசாரணையில் வழக்காக்கி பதியப்பட்டு , வழக்கு விசாரணை அடிப்படையில் தங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

19 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C51 ராக்கெட்

PSLV-C51 என்பது PSLV இன் 53 வது மிஷன் ஆகும். இந்த ராக்கெட் மூலம், பிரேசிலின் Amazonia-1 செயற்கைக்கோளுடன் மேலும் 18 செயற்கைக்கோள்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. from India News https://bit.ly/3uMU1T1

19 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C51 ராக்கெட்

சட்டம் அறிந்து கொள்வோம்.

*வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி?*

பொது நல வழக்கு போடுவது எப்படி ?

பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது. இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும். இது, வழக்குடன் இணைந்தது. முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும். முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம் விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும். அதன் பின்பு, பத்து பேர் வழக்கு போடுவதாக இருந்தால் அவர்கள் பெயரை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, வாதிகள் என்று காண்பியுங்கள். அதன் பின்பு, எதிரிடை என்று போட்டு, எதிர் பார்ட்டி நபர்கள் பெயரை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, பிரதிவாதிகள் என்று காண்பியுங்கள். இதன் பெயர், short cause title எனப்படும்.சிவில் வழக்கில், பிராதை, ஆர்டர் 7, விதி 1 இன் கீழேயே தாக்கல் செய்ய முடியும். ஆகையால், இப்போது, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும், பிராது, ஆர்டர் 7, விதி 1 என்று, நடு மையத்தில் எழுதுங்கள். அதன் பின்பு, வாதிகளின் விலாசம் என்று, தலைப்பிட்டு, வாதி வசிக்கும் மாவட்டம், ஊர், தெரு, கதவு இலக்கம், மற்றும், ஹிந்து என்றால், ஹிந்து என்றும், அப்பா பெயர், வயது, அதன் பின்பு, வாதியின் பெயர் என எழுதுங்கள்.

பல பேர் இருந்தால், வரிசையாக ஒன்று, இரண்டு என எழுதுங்கள். அதன் பின்பு, வாதிக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று எழுதுங்கள். அதன் பின்பு, பிரதிவாதிகளின் விலாசம் என்று தலைப்பிட்டு, மேலே சொன்னது போல, வாதிகளின் முகவரி போலவே, எழுதி கொள்ளுங்கள். அதன் கீழ், பிரதிவாதிகளுக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று குறிப்பிடுங்கள். இதன் பெயர் லாங் cause டைட்டில் ஆகும். இப்போது, அடுத்த பாராவாக, நீதிமன்ற jurisdiction குறிக்க வேண்டும். நீங்கள் வழக்கு போடும் ஊர், தாவா நீதிமன்ற எல்லைக்குட்பட்டதால், இந்த வழக்கு இங்கு தாக்கல் செய்யபடுகிறது என்று எழுதுங்கள். ஒவ்வொன்றும் ஒரு பாரா ஆகும். இப்போது மூன்று பாரா முடிந்திர்க்கும். . வழக்கு போடுபவர், வாதி என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள். வழக்கின் எதிராளி, பிரதிவாதி ஆவார். யார் மேல் பரிகாரம் கோருகிறீர்களோ, அவர்கள் அனைவரையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்.

அடுத்த பாரா, வழக்கு விவரங்களை ஆரம்பியுங்கள். வாதியானவர், இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இப்படி, வழக்கின் சாராம்சத்தை, சுருக்கமாக, பல பாராக்களாக பிரித்து எழுதுங்கள். உதாரணமாக, பொது பாதை, இவ்வளவு நாளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது, இன்ன நபர், அதை ஆக்கிரமித்துள்ளார். இதனை தெரிவித்து, எதிர் மனுதாருக்கு, இந்த தேதியில் வாதியால் மனு, பதிவு தபாலில் அனுப்ப பட்டது. அதை பெற்று கொண்டு, இன்று வரை, பிரதிவாதிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், காலம் கடத்தி வருகின்றனர். இவ்வாறாக, உங்கள் கரு பொருளை மையபடுத்தி, பிராது விவரங்களை சொல்லுங்கள். நீங்கள் அனுப்பிய மனுவின் நகலை தாக்கல் செய்தால், ஒன்றாம் பிரதிவாதிக்கு அனுப்பிய மனு, தபால் ரசீது ஆகியவை வாதி தரப்பு ஒன்றாவது சான்றாவணம் ஆகும் என்று குறிப்பிடுங்கள்.

சட்ட பாயிண்ட் களையும், குறிப்பிடுங்கள். அதன் பின்பு, அடுத்த பாராவாக, உங்கள் வழக்கின் வியாச்சிய மூலத்தை எழுதுங்கள். அதாவது, எந்த தேதியில் ஆக்கிரமிப்புதாரர் ஆக்கிரமித்தார், எப்போது பிரதிவாதிகளுக்கு மனு செய்யப்பட்டது, இன்று வரை பிரதிவாதிகள் வீண் காலம் கடத்தி வருகிறார்கள், மற்றும், வாதி இருக்கும் ஊர், பிரதிவாதி இருக்கும் ஊர், வழக்கு சொத்து இருக்கும் ஊர் ஆகியவற்றை சொல்லி, இதில் உற்பத்தி என்று காண்பியுங்கள். இது தனி பாரா.

அடுத்து, வாதி, நீதிமன்ற கட்டணமாக TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள். அதன் பின்பு, prayer. இதில், நீங்கள் என்ன பரிகாரம் கூறுகிறீர்கள், யார் மீது கூறுகிறீர்கள் என்று சொல்லுங்கள். உதாரணமாக, ஒன்றாம் பிரதிவாதி, பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், ஒன்றாம் பிரதிவாதியை, இரண்டு, மூன்று பிரதிவாதிகள் தாவா பொது இடத்தில் இருந்து அகற்ற, உத்தரவிடும் படிக்கும். அதன் பின்பு, வாதிக்கு, பிரதிவாதிகள் வழக்கிடை செலவை தரும்படிக்கும், மற்றும், நீதிமன்றம் கருதும் இன்ன பிற பரிகாரங்களை வழங்கும்படிக்கும், பிரார்திக்கபடுகிறது என்று முடியுங்கள்.

இதில், அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதால், பிரிவு என்பது, சிவில் procedure code படி, வழக்கு தொடுப்பதற்கு தொண்ணூறு நாட்களுக்கு முன் அறிக்கை அனுப்ப வேண்டும்.

அவசரமாக, இந்த வழக்கை தாக்கல் செய்தால், exemption மனு, பிரிவு, 80(2), civil procedure code படி, தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு, இந்த பிராதுடன் தாக்கல் செய்திருப்பதாக, பிராதில், சொல்லுங்கள். இப்போது, இடது பக்கம் வழக்கறிஞர் கையொப்பமும், வலது பக்கம் வாதிகள் கையொப்பமும் போட வேண்டும். அதன் பின்பு, பிராதை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்று, particulars ஒப் valuation என்று தலைப்பிட்டு, சொத்து மார்க்கெட் மதிப்பு காட்டுங்கள். அதன் பின்பு,TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள். அதன் பின்பு, சரி பார்த்தல் என்று தலைப்பிட்டு, மேலே கண்ட சங்கதிகள் எல்லாம் என் அறிவிற்கு எட்டிய வரை உண்மை என சொல்லி, மதுரையில் வைத்து, தேதியில் கை எழுத்திட்டேன் என சொல்லுங்கள். அதன் பின்பு, சொத்து விவரம் எழுதுங்கள். கிரைய பத்திரத்தில் சொத்து விவரம் கொடுத்திருப்பார்களே, அந்த மாதிரி. அதன் பின்பு, மீண்டும், சரி பார்த்தல் என்று மேலே சொன்னவாறு, எழுதுங்கள். அதன் பின்பு, மேலே சொன்ன short cause title எழுதி, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள், ஆர்டர் ஏழு, விதி பதினான்கின் படி என்று தலைப்பிட்டு, நான்கு column கட்டமிட்டு கொள்ளுங்கள் முதல் column இல், வரிசை என், அடுத்த column இல் ஆவன தேதி, அடுத்த column இல் ஆவன விவரம், அடுத்த column இல் ஆவன தன்மை, அது நகலா அல்லது அசலா என்று காண்பியுங்கள். இப்போது, உங்கள் கைவசம் உள்ளல ஆவனங்களை, வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதன் கீழ், இடது பக்கம், ஊர், தேதியும், வலது பக்கம், வழக்கறிஞர் என்று காண்பியுங்கள். வழக்கறிஞர் இல்லாவிட்டால், வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அசல் ஆவநங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யுங்கள். அது முடியாவிட்டால், சான்றிட்ட நகல் தாக்கல் செய்யலாம். அதுவும் இல்லாவிட்டால், நகலை தாக்கல் செய்யலாம். ஆனால், விசாரணை வரும்போது, அசல் அல்லது சான்றிட்ட நகலைத்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதை, பின்பு கொடுப்பதாக குறிப்பில் காண்பிக்கலாம். இந்த ஆவண பட்டியல் தனி தாளில் தயார் செய்து, பிராதுடன் இணைக்கலாம். இப்போது பிராது தயார். இதனுடன், நீங்கள் வழக்கறிஞர் வைத்தால், வக்காலத்து வைக்க வேண்டும். அதன் பின்பு, ஆவணங்களை, ஒரு தனி தாளில் டாக்கட் போட்டு, தைத்து, அசல ஆவணங்கள தவிர, மற்றவற்றிற்கு, ஐந்து ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டி கொடுங்கள். பிராதின், முதல் பக்கத்தில், valuation சீட் வைக்க வேண்டும். அதன் பின்பு, நீதிமன்ற ஸ்டாம்ப் பேப்பர், அதன் கீழ் பிராது வைத்து தைத்து கொள்ளுங்கள். உள்ளே, வக்காலத்து, ஆவணங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். சில நீதிமன்றத்தில், வாதி, பிரதிவாதி விலாசம் தனி தாளில் அடித்து வைக்க வேண்டி உள்ளது. முன்பே சொன்னது போல, short cause title எழுதி, STATEMENT U/O. VI, RULE 14-A என்று, தலைப்பிட்டு அதன் கீழ், வாதி, பிரதிவாதி விலாசங்கள் எழுத வேண்டும்.

அதன் பின்பு, supporting affidavit. இதுவும், short cause title எழுதி, SUPPORTING AFFIDAVIT FILED BY THE 1st PLAINTIFF ABOVENAMED U/O VI, R. 15(4) OF C.P.C. என்று தலைப்பிட்டு, அதன் கீழ், வாதியின் விலாசத்தை தலை கீழாக எழுதி, பிராதில் வாதியின் விலாசம் எழுதுவீர்களே, அது போல, ஆகிய நான், சத்திய பிரமாணத்தின் பேரில் எழுதி வைத்த அப்பிடவிட் என்று எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, நான் வழக்கின் வாதி ஆவேன். எனக்கு வழக்கு விவரங்கள் பூராவும் நன்கு தெரியும் என்று சொல்லி, அடுத்த பாராவில், சுருக்கமாக பிராதின் விவரத்தை சொல்லுங்கள். பல வாதிகள் இருந்தால், பிற வாதிகளுக்காக, இந்த அப்பிடவிட் தை தாக்கல் செய்வதாக கூறி கொள்ளுங்கள்.

இறுதியாக, தனி பாராவாக, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் பிராதுபடி தீர்ப்பளிக்க வேண்டும் என்று முடியுங்கள். அதன் பின்பு, இடது பக்கம், மேலே சொன்ன சங்கதிகள் யாவும் உண்மை என சொல்லி, தேதியில், என் முன்பாக, ஊரில் வைத்து கை எழுத்திட்டார் என எழுதுங்கள். வலது பக்கம், வாதியின் கையொப்பம் இடுங்கள். அதன் நடுவில், ஒரு வழக்கறிஞரின் attestation வாங்கி கொள்ளுங்கள். இப்போது supporting அப்பிடவிட் ரெடி. பிராதின் ஒவ்வொரு பக்கத்திலும், supporting affidavit ஒவ்வொரு பக்கத்திலும், வாதி கையெழுத்து  வாங்க வேண்டும். அடுத்து, அரசு ஊழியர்கள் மேல் வழக்கு தொடுக்கும் முன், உரிய அறிவிப்பு அனுப்பாவிட்டால், அதற்கும் ஒரு அப்பிடவிட், மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கம் போல, short cause டைட்டில் எழுதுங்கள். இது தனி இடை நிலை மனு ஆகும். எனவே, லேசாக மாற்றி, நீதிமன்ற பெயர், ஊர் எழுதி, அதன் கீழ், இடைநிலை மனு எண் என எழுதி, இடம் விட்டு, பார் போட்டு, 2018 என வருடத்தை போட்டு கொள்ளுங்கள். இதில், வாதிகள் மனுதாரர்கள் ஆவார்கள். எனவே, வாதிகள் பெயரை எழுதி, மனுதார்கள் / வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அதே போல, கீழே, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகள் என்று, அரசு அலுவலர்களை மட்டும் சேர்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் பொது நல வழக்கு போடும்போது, முதல் பார்ட்டி ஆக, ஆக்கிரமிப்புதாரரை காண்பித்து இருந்தால், இரண்டாம் பார்ட்டி ஆக, அரசு அதிகாரிகளை காண்பித்து இருப்பீர்கள். இங்கு, அரசு அலுவலர்கள் மட்டும் வருவதால், அவர்களை, இம்மனுவில், எதிர்மனுதார்களாக காண்பிக்கும்போது, வரிசையாக காண்பித்து, அவர்கள் முக்கிய வழக்கில் எந்த cadre ஒ, அந்த cadre காண்பியுங்கள். உதாரணமாக, மாவட்ட ஆட்சியர், முக்கிய வழக்கில் இரண்டாம் பிரதிவாதி என்றால், இங்கு, முதல் எதிர்மனுதாராக காண்பித்து இருந்தால், முதல் எதிர்மனுதார் / இரண்டாம் பிரதிவாதி என்று காண்பியுங்கள். இப்போது, அப்பிடவிட் க்கு வருவோம். முதல் மனுதார் / முதல் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யும் அப்பிடவிட் என்று தலைப்பிட்டு கொள்ளுங்கள். அல்லது, எந்த மனுதார் வேண்டுமானாலும் அப்பிடவிட் தாக்கல் செய்யலாம். வழக்கம் போல, sworn செய்து கொள்ளுங்கள். அதாவது, விலாசத்தை தலை கீழாக எழுதி, ஆகிய நான் சமர்ப்பிக்கும் அப்பிடவிட் என்று காண்பியுங்கள்.

அடுத்து. முதல் பாரா, supporting அப்பிடவிட் இல் சொன்னது போல எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, ஒவ்வொரு சிறு பாராவாக, வழக்கு இந்த அரசு அதிகாரிகள் மீது உடனே தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களுக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பை, அனுப்ப முடியவில்லை என்று பொருத்தமான காரணத்தை காண்பியுங்கள்.

இறுதியாக, தனி பாராவில், இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு பெருத்த இழப்பு ஏற்படும். ஆனால், எதிர்மனுதாருக்கு எவ்வித ஆட்சேபனையும் இம்மனு தாக்கல் செய்ய இருக்க போவதில்லை என்று எழுதி கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள். இங்கும், supporting அப்பிடவிட் இல் இருப்பது போல முடித்து கொள்ளுங்கள். அப்பிடவிட் ரெடி.

இப்போது மனு. இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட் short cause title அதே போல எழுதி கொள்ளுங்கள். மனுதார் / வாதி தரப்பு மனு பிரிவு 80(2) c.p.c. படி என்று எழுதி கொள்ளுங்கள். இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட்டில் கண்டுள்ள காரநன்களால், கணம் கோர்ட்டார் அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள். அதாவது, அப்பிடவிட் prayer உம, மனு prayer உம, ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த வழக்கை உடனடியாக தாக்கல் செய்ய, அரசு ஊழியர்களுக்கு உரிய அறிவிப்பை கொடுக்க exemption செய்ய முறையான காரணங்களை சொல்லாவிட்டால், நீதிமன்றம் உங்கள் வழக்கை உடனடியாக கோப்பிற்கு எடுக்காது. நோட்டீஸ் அனுப்பி விட்டு, மூன்று மாதம் கழித்து தாக்கல் செய்ய சொல்லுவார்கள். அடுத்து, லீவ் மனு. அதாவது, நீங்கள் பொது நல மனு தாக்கல் செய்ய, நீதிமன்றந்தில் லீவ் வாங்க வேண்டும். இது ஒரு விதமான், அனுமதி ஆகும். இதுவும், இடை நிலை மனுதான். இதற்கும் அப்பிடவிட், மனு வைக்க வேண்டும். அப்பிடவிட், ஒருமையில் இருக்க வேண்டும். அதாவது, நான், கேட்கிறேன் என்று வர வேண்டும். ஆனால், பிராதோ, வாதி, வாதி கோருகிறார் என்று அந்த நடையில் வர வேண்டும். ஒரு பொதுவான நலத்திற்கு எல்லா நபர்களுக்கும் ஒரே நபரே வழக்கு நடத்த, நீதிமன்றம் அனுமதி கொடுக்க வேண்டும். அதற்குதான், இந்த மனு. வழக்கம் போல, அப்பிடவிட், இதில் நீங்கள் ஏன் ஒரு நபரே இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று காரணம் கூற வேண்டும. அதே போல மனுவை, ஆர்டர் 1, விதி 8 இன் படி தாக்கல் செய்ய வேண்டும்.

prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், இவ்வழக்கில் ஒன்றாம் வாதியே, பிற வாதிகளுக்காக, இந்த வழக்கை நடத்த, உத்தரவிட வேண்டியது, அவசியமாயும், நியாயமான்யும் உள்ளது என முடியுங்கள். ஒவ்வொரு இடை நிலை மனுவில் இரண்டு ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டுங்கள். இதன் கீழே, படி மெமோ. அதாவது, பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் வைக்க வேண்டும். பிராது copy, நோட்டீஸ், படி மெமோ, போஸ்டல் கவர் மற்றும், அஞ்சல் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை வைக்க வேண்டும். ஒரு எதிர்பார்ட்டி க்கு உள்ளூர் என்றால் ஐந்து ரூபாய் மற்றும் போஸ்டல் ஸ்டாம்ப் முப்பத்தைந்து ருபாய் ஒட்டுங்கள். பிரதிவாதி குடி இருப்பது வேறு நீதிமன்றம் மூலம் போகும் என்றால், கூடுதலாக பத்து ரூபாய், ஒரு நபருக்கு ஓட்டுவது நல்லது, நீதிமன்ற வில்லை. பிராதுக்கு ஒரு டாக்கட் வாங்கி வைத்து, கூடுதலாக நான்கு பச்சை காகிதங்கள் பிராதின் அடியில் வைத்து, பிராது டாக்கட், அதன் மேல் நான்கு கூடுதல் ஷீட்ஸ், அதன் மேல் பிராது, அதன் மேல் கோர்ட் பீஸ், அதன் மேல் valuation சீட் வைத்து தைத்து கொள்ளுங்கள். இப்போது, எல்லாம் தயார். இனி, இந்த வழக்கை இன்றே, நீதிமன்றம் கோப்பிற்கு எடுக்க வேண்டுமானால், emergent மனு மற்றும் அப்பிடவிட் வைக்க வேண்டும். இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் மனுவில் ஒட்டுங்கள். இதை மேலே வைத்து, காலை பத்து முப்பதுக்கு நீதிபதியிடம் சமர்ப்பியுங்கள். இதில், வழக்கு முடியும்வரை, உருத்து கட்டளை வேண்டும் என்றால், அதற்கு தனி அப்பிடவிட், மனு. மனு ஆர்டர் 39, விதி 1 இன் படி. அப்பிடவிட், வழக்கம் போலதான். அதில் கூடுதலாக, இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு இழப்பு ஏற்படும். எனக்கு prima facie case and balance of convenience உள்ளது என சேர்த்து கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், எதிர்மனுதார் / பிரதிவாதி, வழக்கு முடியும்வரை, தாவா சொத்தை பயன்படுத்தக்கூடாது என இடைக்கால உருத்து கட்டளை வழங்கும்படிக்கும்,அதன் தொடர்ச்சியாக, இன்று, ஒரு exparte ad-interim injunction இம்மனு முடியும்வரை தரும்படிக்கும், பிரார்த்திக்கபடுகிறது.

இதில் ஒவ்வொரு இடை நிலை மனுவுக்கும், படி மெமோ வைக்க வேண்டும். dispense வித் மனுவுக்கு மட்டும் தேவை இல்லை. படி, பிராதில் சொன்ன படிதான். ஒரு நபருக்கு ஐந்து ரூபாய். முடிந்தால், ஒரு வழக்கறிஞரிடம் ரெடி செய்து வாங்கி கொள்ளுங்கள். அல்லது நீங்கள் தயார் செய்து, ஒரு வழக்கறிஞரிடம் காண்பித்து கொள்ளுங்கள். அதன் பின்பு, file செய்வது நல்லது. இது ஒரு மாதிரியே. இதில் நீங்கள் வழக்கை நன்றாக சட்டப்படி எழுதினால்தான், வழக்கு வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஒரே நாளில் நம்பர் ஆகி விடும், சரியாக இருந்தால். இடைக்கால உறுத்து கட்டளையும், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. அசல் ஆவணங்களை வைத்தால், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு அப்பிடவிட், மனு ஆகியவற்றுக்கும் டார்க் கெட் போட்டு கொள்ளுங்கள்.

வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா..?

இன்றைய சிந்தனை…

வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா..??

ஒரு ஞானியிடம் அவருடைய சீடர் கேட்டார். “குருவே மனிதனுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?”

“பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் இல்லை”

சீடருக்கோ திகைப்பு. சிலர் கேள்விகள் கேட்கும் போது சொல்லப்படும் பதிலுக்குத் தயாராக இருக்க மாட்டார்கள். அந்த சீடரும் அப்படித்தான். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது என்று அவர் சொன்னால் அந்த அர்த்தம் என்ன என்று கேட்டு தத்துவார்த்தமான சொற்பொழிவை குருவிடமிருந்து கேட்டு மகிழலாம் என்றால் என்ன இவர் இப்படிச் சொல்லி ஒரேயடியாக முடித்து விட்டாரே என்று ஏமாற்றமடைந்தார்.

அவருடைய ஏமாற்றத்தைப் புரிந்து கொண்ட ஞானி புன்னகையுடன் சொன்னார். “பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. அவர்கள் பிறக்காமல் இருந்திருந்தாலும், வாழாமல் இருந்திருந்தாலும் உலகத்தில் எந்த உண்மையான மாற்றமும் நேர்ந்து விட்டிருக்காது. எனவே தான் பொதுவாக இல்லை என்றேன்.”

சீடர் கேட்டார். “அப்படியானால் வாழ்வது வீண் தானா?”

ஞானி சொன்னார். “வாழ்க்கை வீணாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டுமானால் மனிதன் தன் வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அவனுக்கு அந்த உரிமையும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது”

அந்த ஞானி சொன்னதில் பேருண்மை பொதிந்து இருக்கிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதும், அர்த்தமில்லாததும் அவரவர் கையில். வாழ்க்கையில் அர்த்தம் உள்ளது என்று நம்பி அதை உபயோகமாகக் கழிக்கலாம். அர்த்தம் உள்ளதா என்பதை சிந்திக்காமலேயே வாழ்க்கையை வீணாக்கியும் மாளலாம்.

சரித்திரம் படைத்த அத்தனை பேரும் தாங்கள் ஒரு அர்த்தத்தோடு படைக்கப்பட்டு இருப்பதாக நம்பினவர்கள். அதனால் தான் அவர்களால் தங்களது நிரந்தரமான சுவடுகளை உலகில் விட்டு
விட்டுப் போக முடிந்தது. முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சனை அப்படிப்பட்டவர்களில் ஒருவராகச் சொல்லலாம். அவரிடம் அரசியலில் பெரிதாக விசேஷத் திறமைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் அவர் தன்னை இறைவன் ஒரு அர்த்தத்துடன் படைத்திருப்பதாகவும், விதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனாகவும் (Man of Destiny) உறுதியாக எண்ணியதாகக் கூறினார்கள். உடல் நலக்குறைவு அவரை சிறு வயதில் இருந்தே ஆட்டிப்படைத்தது என்றாலும் அதையும் மீறி அவர் நிறைய சாதிக்கவும், சரித்திரம் படைக்கவும் அவருடைய அந்த எண்ணமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதிகளில் Ph.d பட்டம் பெற்றவர் அவர் ஒருவரே. முதல் உலகப் போர் சமயத்தில் உலக அமைதிக்காக பாடுபட்டதற்காக சமாதான நோபல் பரிசையும் பெற்றார்.

ஆட்டு மந்தைக் கூட்டத்தில் ஒரு அங்கமாக ஆகி விடாமல் தனித்து நின்று நல்ல மகத்தான மாற்றங்களை தாங்கள் வாழ்ந்த சமுதாயத்தில் கொண்டு வந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தைத் தேடி உருவாக்கியவர்கள் தான். பாரதி பாடியது போல..

”தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி
துன்பம் மிக உழன்று பிறர் வாட
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி –கொடும் கூற்றுக்கு
இரையென மாயும் பல வேடிக்கை
மனிதரை போல ”

அவர்கள் அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழ மறுத்தவர்கள். அப்படி வாழ்வதை ஒரு கொடுமையாக நினைத்தவர்கள். அதனாலேயே அவர்கள் தங்களுக்கென்று சில உயர் லட்சியங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்களுக்குள்ளே ஒரு அக்னியை விதைத்துக் கொண்டவர்கள் அவர்கள். விளைவாக ஒளிமயமாக வாழ்ந்து வென்றவர்கள் அவர்கள்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அவருடைய இளமைக்காலத்தில் அவர் பெரிய தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தவில்லை என்பதை அறிவார்கள். வக்கீலுக்குப் படித்து விட்டு முதல் முதலில் வாதாடப் போன போது திக்கு முக்காடிப் போனார். அப்படிப் பட்டவர் வாழ்க்கையின் பின்பகுதியில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தையே ஆன்ம வலிமையுடன் எதிர்த்து வெற்றியும் பெற்றார். மௌண்ட் பேட்டன் பிரபு அவரை ’ஒரு தனி மனித ராணுவம்’ என்று பாராட்டினார். அவர் பின் ஒரு தேசமே திரண்டு நின்றது. இதெல்லாம் அவர் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உருவாக்கிக் கொண்ட பிறகு சாத்தியமானவை தான். சத்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த அபார நம்பிக்கையும், நாட்டு சுதந்திரம் என்ற லட்சியமும் அவரைப் பலவீனமான மனிதர் என்ற நிலையிலிருந்து மாபெரும் சக்தி வாய்ந்த மனிதர் என்ற பெருமை வரை உயர்த்தி விட்டிருக்கின்றன.

நான் பலவீனமானவன், பலவீனமானவள், எனக்கு என்று எந்தச் சிறப்புத் தகுதியும் இல்லை, என்றெல்லாம் சொல்லாதீர்கள். கண் முன்னே வரலாறாக இருக்கும் மகாத்மா காந்தியின் உதாரணத்தை மறந்து விடாதீர்கள். ஏதாவது நல்ல லட்சிய அக்னியால் தீண்டப் பெறுங்கள். அந்த லட்சிய அக்னி உங்கள் பலவீனங்களை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விடும். உங்களுக்கு அந்த லட்சியம் அசுர பலத்தைத் தரும். கண்டிப்பாக வாழ்க்கை நல்ல பாதையை நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்.

மனிதர்கள் வெள்ளைத் தாளாகப்

படைக்கப்பட்டிருக்கிறார்கள். கடைசி வரை வெள்ளைத் தாளாகவே அவர்கள் வாழ்ந்து முடித்து விடலாம். அதில் பொருளற்ற கிறுக்கல்களைக் கிறுக்கித் தள்ளலாம். அதை குப்பையாக கசக்கியும் எறியலாம். அதில் கவிதையையும், காவியத்தையும் பதித்து வைக்கலாம். அர்த்தமுள்ள ஆயிரம் விஷயங்களை எழுதி வைக்கலாம்.
கடைசியில் குப்பைக்கூடைக்குப் போகிறதா, பத்திரமாக பலருக்கும் பயன்படும் வகையில் சேகரித்து வைக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வாழ்க்கைக்கு அர்த்தம்
நிர்ணயிக்கப்படுகிறது.

உங்கள் வாழ்க்கைத் தாளில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அதில் அர்த்தம் இருக்கிறதா? இன்று எழுதுவதற்கெல்லாம் நாளை நீங்கள் வருந்த வேண்டி இருக்குமா? இந்தத் தாளை மேலும் உயர்ந்த விஷயங்களால் நிரப்பி இருக்கலாமே என்று எதிர்காலத்தில் சுய பச்சாதாபம் அடைய வேண்டி வருமா? சிந்தியுங்கள். இப்படி எல்லாம் ஆழமாக சிந்தித்து அது செயல்களாகவும் பரிணமித்தால் அது இனி தொடரும் வாழ்க்கையைக் கண்டிப்பாக நெறிப்படுத்துவதுடன் அர்த்தப்படுத்தும். லட்சியம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை எல்லாம் எனக்குப் பொருந்தாது, எனக்கு அதில் பெரிய ஈடுபாடும் இல்லை என்று இன்னமும் நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. மிகப்பிரபலமாகி பெரிய சாதனைகள் புரிந்து வாழ்ந்த வாழ்க்கை தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சொல்ல முடியாது.

மற்றவர்கள் வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் சுலபப்படுத்தியிருந்தால், அடுத்தவர் வாழ்க்கைக்கு ஏதாவது விதத்தில் பயன்பட்டிருந்தால் அதுவும் அர்த்தமுள்ள வாழ்க்கையே. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றால் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் என்றும் சொல்ல முடியாது. நேசித்தும் நேசிக்கப்பட்டும் மற்றவர் மனதில் உறுதியான இடத்தை நிரந்தரமாகப் பிடித்தால் அப்படிப்பட்ட வாழ்க்கையும் அர்த்தமுள்ளதே. எனவே வாழ்க்கையில் அதிகம் நேசியுங்கள். அன்பாக இருங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருந்தால் உங்கள் வார்த்தைகளாலும், செய்கைகளாலும் எத்தனையோ பேர் பலன் பெறுவார்கள். எத்தனையோ பேருடைய பாரங்களை நீங்கள் இலகுவாக்குவீர்கள். பலரையும் பிரமிக்க வைக்கும் காவியமாக இல்லா விட்டாலும் சிலரை சிலிர்க்க வைக்கும் ஒரு அழகான கவிதையாய் நீங்கள் கண்டிப்பாக வாழ்ந்து மடியலாம். நான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கிறேன் என்ற நிறைவுடன் உலகை விட்டு ஒரு நாள் பிரியலாம்.

👼சிறுவன் கேட்ட கேள்வி..!!

சிறுவன் கேட்ட கேள்வி..!!

ஷாம் ஒரு 10 வயது சிறுவன். அவனது தந்தை தனது மகனுடன் நேரத்தை செலவிட முடியாத மிகவும் ஓய்வில்லாத தொழிலதிபர். ஷாம் தனது தந்தையின் கவனத்திற்காக ஏங்கினான். அவன் தனது நண்பர்களைப் போலவே வெளியில் சென்று தந்தையுடன் விளையாட விரும்பினான்.

ஒரு நாள், மாலையில் தனது தந்தையை வீட்டில் பார்த்த ஷாம் ஆச்சரியப்பட்டான். ‘அப்பா, உங்களை வீட்டில் பார்ப்பது ஒரு பெரிய ஆச்சரியம்” என்று ஷாம் கூறினான். ‘ஆமாம் மகனே, என் அலுவலக கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனவே நான் வீட்டில் இருக்கிறேன். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து நான் விமான நிலையத்திற்கு செல்வேன்” என்று அவனது தந்தை பதிலளித்தார்.

ஷாம் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பின்னர் அவன், ‘அப்பா, நீங்கள் ஒரு நாளில் அல்லது அரை நாளில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

தந்தை குழப்பமடைந்து ஷாமிடம் ‘நீ ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறாய்?” என்று கேட்டார். ஆனால் ஷாம் விடாப்பிடியாக ‘ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான். ஷாமின் தந்தை, ‘ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 ஆயிரம் இருக்கும்” என்று பதிலளித்தார்.

ஷாம் தனது அறைக்கு ஓடி, தனது சேமிப்புகளைக் கொண்ட உண்டியலுடன் கீழே வந்தான். ‘அப்பா, எனது உண்டியலில் 20 ஆயிரம் இருக்கிறது. எனக்காக இரண்டு மணிநேரத்தை ஒதுக்க முடியுமா? நான் கடற்கரைக்குச் சென்று நாளை மாலை உங்களுடன் இரவு உணவு சாப்பிட விரும்புகிறேன். இதை உங்கள் அட்டவணையில் சேர்க்க முடியுமா?” என்று ஷாம் கேட்டான்.

ஷாமின் தந்தை பேச்சற்று இருந்தார்..!

கருத்து : ஒரு பெற்றோர் தனது குழந்தைக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசு நேரம். பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது..!!

அண்டார்டிகாவில் பரவி வரும் பச்சை நிற உயிரினம்..!

அண்டார்டிகாவில் பரவி வரும் பச்சை நிற உயிரினம்..!

விண்வெளியிலிருந்து கூட காணலாம்..!!

அண்டார்டிகாவின் பனிப்பிரதேசத்தில் பனிப்பாறைகள் பச்சை நிறமாக மாறும் நிலை உருவாகியுள்ளது. அன்டார்டிகாவில் ஏன் பனிப்பாறைகள் பச்சை நிறமாக மாறுகிறது என்று ஒரு ஆராய்ச்சிக் குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. பனிப்பாறைகளில் பரவும் இந்த பச்சை நிறம் விண்வெளியிலிருந்து சாட்டிலைட் மூலம் பார்த்தாலும் கூட தெரிகிறது என்று கூடுதல் தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த பச்சை நிறம் பனிப்பாறைகளில் எதனால் உருவானது? உண்மையில் இது என்ன உயிரினம்? எதனால் இப்படி பனிப்பாறைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இவை படர்ந்துளளது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். அண்டார்டிகாவில் உள்ள பல இடங்களில் இந்த பச்சை நிறம் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளில் காணப்படுகிறது.

பூமியில் நிகழும் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும், பூமி அதிக வெப்ப மயமாதல் காரணமாக நிலவும் வெப்பநிலை மாற்றத்தாலும் இந்த “பச்சை பனி” உருவாகி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் இவை வெகு வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவி வளர்ந்து வருகிறதாம்.

அண்டார்டிகாவில் காணப்படும் இந்த பச்சை நிறம் உண்மையில் பாசி வகை பூக்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிகமாகும் வெப்பநிலை மாற்றத்தினால் பனிக்கட்டிகள் உருகி ஓடும் தடங்களில் இவை வேகமாகப் பரவி, நீரோடும் தடத்தில் எல்லாம் பரந்து வளர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பச்சை நிறம் விண்வெளியிலிருந்து கூட காணக்கூடிய அளவிற்கு மிகவும் செழிப்பாக வளர்ந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியிலிருந்து கூட இந்த பச்சை நிறங்களைக் காணமுடிகிறது என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் இந்த பச்சை நிற பாசி வகை இருப்பதை பிரிட்டிஷ் ஆய்வாளர் எர்னஸ்ட் ஷாக்லெட்டன் என்பர் நீண்ட காலத்திற்கு முன்னர் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அண்டார்டிகாவில் எந்த அளவிற்கு இது பரந்து வளர்ந்துள்ளது என்பது இதுவரை தெரியாமலே இருந்து வந்தது.

இப்போது, ​​ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல் 2 செயற்கைக்கோள் இரண்டு ஆண்டுகளில் இந்த பச்சை நிறம் படர்ந்துள்ள தரவுகளைச் சேகரித்துள்ளது. இந்த சாட்டிலைட் தகவல்களைப் பயன்படுத்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு மற்றும் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆகியவற்றின் ஆராய்ச்சி குழு சேகரித்த நிலத்தடி ஆய்வு தகவலுடன் அண்டார்டிகாவில் பரந்து வளர்ந்து வரும் பாசி பூக்களின் முதல் வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.

அண்டார்டிக் கடற்கரையில் இப்பொழுது இவற்றை எங்கெல்லாம் காணமுடியும் என்ற முழு வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. இப்பொழுது இந்த பாசிப் பூக்கள் இருக்கும் இடத்தின் அடிப்படை இடம் மற்றும் அளவு என்ன என்ற தகவல் நம்மிடம் உள்ளது, எதிர்காலத்தில் இவை இன்னும் அதிகரிக்கத் தொடங்குகிறதா என்பதை எளிதாக இந்த வரைபடம் காட்டிவிடும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் துறையின் மாட் டேவி ராய்ட்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

அண்டார்டிகாவில் மோசெஸ் மற்றும் லைச்சன்கள் என்ற இரண்டு வகை பாசி வகைகள் அதிகமாகக் காணப்படும் ஒளிச்சேர்க்கை உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. இந்த பாசி வகைகள் மட்டுமின்றி, அண்டார்டிகாவில் சுமார் 1,679 தனித்தனி பாசிப் பூக்கள் வகை தற்பொழுது இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவை வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடைப் உறிஞ்சக்கூடிய முக்கிய திறனுடன் காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் உள்ள பாசிப் பூக்கள் சராசரியாக 875,000 இங்கிலாந்து பெட்ரோல் கார் பயணங்களால் தவிர்க்கப்படும் கார்பனின் அளவிற்குச் சமம் என்று டேவி கூறியுள்ளார். இந்த எண் பார்ப்பதற்கு நிறைய போன்று தெரிந்தாலும், உண்மையில் உலகளாவிய கார்பன் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, இது மிகவும் அற்பமான எண் தான் என்று தெரிவித்துள்ளார். இந்த பச்சை பாசிகள் வளிமண்டலத்திலிருந்து கார்பனை எடுத்துக்கொள்கிறது.

அண்டார்டிகாவில் பனிப்பாறைகளில் பச்சை நிறத்தில் மட்டும் இந்த உயிரினங்கள் காணப்படுவதில்லை, அண்டார்டிகாவில் உள்ள இன்னும் சில இடங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பாசிகள் வளர்ந்து வருவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்போது இந்த பாசி வகைகளையும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இருப்பினும் மற்ற நிறங்களில் உள்ள பாசி வகைகள், வரைபடத்தை விண்வெளியிலிருந்து உருவாகுவதைக் கடினமாக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

💪வெற்றியை தீர்மானிப்பது திறமையா? நிதானமா?

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே…

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்…

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்…

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து…

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்…

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்…

“நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்….

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்….

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,…

“எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது….?’’

எனக் கேட்டன.

“ஒரு சூட்சுமமும் இல்லை.

நான் பொறுமையாக காத்திருந்தேன்.

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

“வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,…

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது…”

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே…

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

“ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்…

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் பூனையிடம் கிடையாது.

ஆனால்…

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.

மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதே
நம் பலம்.

நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்.

வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா..??


வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா..??

ஒரு ஞானியிடம் அவருடைய சீடர் கேட்டார். “குருவே மனிதனுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?”

“பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் இல்லை”

சீடருக்கோ திகைப்பு. சிலர் கேள்விகள் கேட்கும் போது சொல்லப்படும் பதிலுக்குத் தயாராக இருக்க மாட்டார்கள். அந்த சீடரும் அப்படித்தான். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது என்று அவர் சொன்னால் அந்த அர்த்தம் என்ன என்று கேட்டு தத்துவார்த்தமான சொற்பொழிவை குருவிடமிருந்து கேட்டு மகிழலாம் என்றால் என்ன இவர் இப்படிச் சொல்லி ஒரேயடியாக முடித்து விட்டாரே என்று ஏமாற்றமடைந்தார்.

அவருடைய ஏமாற்றத்தைப் புரிந்து கொண்ட ஞானி புன்னகையுடன் சொன்னார். “பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. அவர்கள் பிறக்காமல் இருந்திருந்தாலும், வாழாமல் இருந்திருந்தாலும் உலகத்தில் எந்த உண்மையான மாற்றமும் நேர்ந்து விட்டிருக்காது. எனவே தான் பொதுவாக இல்லை என்றேன்.”

சீடர் கேட்டார். “அப்படியானால் வாழ்வது வீண் தானா?”

ஞானி சொன்னார். “வாழ்க்கை வீணாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டுமானால் மனிதன் தன் வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அவனுக்கு அந்த உரிமையும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது”

அந்த ஞானி சொன்னதில் பேருண்மை பொதிந்து இருக்கிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதும், அர்த்தமில்லாததும் அவரவர் கையில். வாழ்க்கையில் அர்த்தம் உள்ளது என்று நம்பி அதை உபயோகமாகக் கழிக்கலாம். அர்த்தம் உள்ளதா என்பதை சிந்திக்காமலேயே வாழ்க்கையை வீணாக்கியும் மாளலாம்.

சரித்திரம் படைத்த அத்தனை பேரும் தாங்கள் ஒரு அர்த்தத்தோடு படைக்கப்பட்டு இருப்பதாக நம்பினவர்கள். அதனால் தான் அவர்களால் தங்களது நிரந்தரமான சுவடுகளை உலகில் விட்டு
விட்டுப் போக முடிந்தது. முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சனை அப்படிப்பட்டவர்களில் ஒருவராகச் சொல்லலாம். அவரிடம் அரசியலில் பெரிதாக விசேஷத் திறமைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் அவர் தன்னை இறைவன் ஒரு அர்த்தத்துடன் படைத்திருப்பதாகவும், விதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனாகவும் (Man of Destiny) உறுதியாக எண்ணியதாகக் கூறினார்கள். உடல் நலக்குறைவு அவரை சிறு வயதில் இருந்தே ஆட்டிப்படைத்தது என்றாலும் அதையும் மீறி அவர் நிறைய சாதிக்கவும், சரித்திரம் படைக்கவும் அவருடைய அந்த எண்ணமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதிகளில் Ph.d பட்டம் பெற்றவர் அவர் ஒருவரே. முதல் உலகப் போர் சமயத்தில் உலக அமைதிக்காக பாடுபட்டதற்காக சமாதான நோபல் பரிசையும் பெற்றார்.

ஆட்டு மந்தைக் கூட்டத்தில் ஒரு அங்கமாக ஆகி விடாமல் தனித்து நின்று நல்ல மகத்தான மாற்றங்களை தாங்கள் வாழ்ந்த சமுதாயத்தில் கொண்டு வந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தைத் தேடி உருவாக்கியவர்கள் தான். பாரதி பாடியது போல..

”தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி
துன்பம் மிக உழன்று பிறர் வாட
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி –கொடும் கூற்றுக்கு
இரையென மாயும் பல வேடிக்கை
மனிதரை போல ”

அவர்கள் அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழ மறுத்தவர்கள். அப்படி வாழ்வதை ஒரு கொடுமையாக நினைத்தவர்கள். அதனாலேயே அவர்கள் தங்களுக்கென்று சில உயர் லட்சியங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்களுக்குள்ளே ஒரு அக்னியை விதைத்துக் கொண்டவர்கள் அவர்கள். விளைவாக ஒளிமயமாக வாழ்ந்து வென்றவர்கள் அவர்கள்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அவருடைய இளமைக்காலத்தில் அவர் பெரிய தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தவில்லை என்பதை அறிவார்கள். வக்கீலுக்குப் படித்து விட்டு முதல் முதலில் வாதாடப் போன போது திக்கு முக்காடிப் போனார். அப்படிப் பட்டவர் வாழ்க்கையின் பின்பகுதியில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தையே ஆன்ம வலிமையுடன் எதிர்த்து வெற்றியும் பெற்றார். மௌண்ட் பேட்டன் பிரபு அவரை ’ஒரு தனி மனித ராணுவம்’ என்று பாராட்டினார். அவர் பின் ஒரு தேசமே திரண்டு நின்றது. இதெல்லாம் அவர் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உருவாக்கிக் கொண்ட பிறகு சாத்தியமானவை தான். சத்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த அபார நம்பிக்கையும், நாட்டு சுதந்திரம் என்ற லட்சியமும் அவரைப் பலவீனமான மனிதர் என்ற நிலையிலிருந்து மாபெரும் சக்தி வாய்ந்த மனிதர் என்ற பெருமை வரை உயர்த்தி விட்டிருக்கின்றன.

நான் பலவீனமானவன், பலவீனமானவள், எனக்கு என்று எந்தச் சிறப்புத் தகுதியும் இல்லை, என்றெல்லாம் சொல்லாதீர்கள். கண் முன்னே வரலாறாக இருக்கும் மகாத்மா காந்தியின் உதாரணத்தை மறந்து விடாதீர்கள். ஏதாவது நல்ல லட்சிய அக்னியால் தீண்டப் பெறுங்கள். அந்த லட்சிய அக்னி உங்கள் பலவீனங்களை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விடும். உங்களுக்கு அந்த லட்சியம் அசுர பலத்தைத் தரும். கண்டிப்பாக வாழ்க்கை நல்ல பாதையை நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்.

மனிதர்கள் வெள்ளைத் தாளாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். கடைசி வரை வெள்ளைத் தாளாகவே அவர்கள் வாழ்ந்து முடித்து விடலாம். அதில் பொருளற்ற கிறுக்கல்களைக் கிறுக்கித் தள்ளலாம். அதை குப்பையாக கசக்கியும் எறியலாம். அதில் கவிதையையும், காவியத்தையும் பதித்து வைக்கலாம். அர்த்தமுள்ள ஆயிரம் விஷயங்களை எழுதி வைக்கலாம்.
கடைசியில் குப்பைக்கூடைக்குப் போகிறதா, பத்திரமாக பலருக்கும் பயன்படும் வகையில் சேகரித்து வைக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வாழ்க்கைக்கு அர்த்தம்
நிர்ணயிக்கப்படுகிறது.

உங்கள் வாழ்க்கைத் தாளில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அதில் அர்த்தம் இருக்கிறதா? இன்று எழுதுவதற்கெல்லாம் நாளை நீங்கள் வருந்த வேண்டி இருக்குமா? இந்தத் தாளை மேலும் உயர்ந்த விஷயங்களால் நிரப்பி இருக்கலாமே என்று எதிர்காலத்தில் சுய பச்சாதாபம் அடைய வேண்டி வருமா? சிந்தியுங்கள். இப்படி எல்லாம் ஆழமாக சிந்தித்து அது செயல்களாகவும் பரிணமித்தால் அது இனி தொடரும் வாழ்க்கையைக் கண்டிப்பாக நெறிப்படுத்துவதுடன் அர்த்தப்படுத்தும். லட்சியம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை எல்லாம் எனக்குப் பொருந்தாது, எனக்கு அதில் பெரிய ஈடுபாடும் இல்லை என்று இன்னமும் நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. மிகப்பிரபலமாகி பெரிய சாதனைகள் புரிந்து வாழ்ந்த வாழ்க்கை தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சொல்ல முடியாது.

மற்றவர்கள் வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் சுலபப்படுத்தியிருந்தால், அடுத்தவர் வாழ்க்கைக்கு ஏதாவது விதத்தில் பயன்பட்டிருந்தால் அதுவும் அர்த்தமுள்ள வாழ்க்கையே. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றால் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் என்றும் சொல்ல முடியாது. நேசித்தும் நேசிக்கப்பட்டும் மற்றவர் மனதில் உறுதியான இடத்தை நிரந்தரமாகப் பிடித்தால் அப்படிப்பட்ட வாழ்க்கையும் அர்த்தமுள்ளதே. எனவே வாழ்க்கையில் அதிகம் நேசியுங்கள். அன்பாக இருங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருந்தால் உங்கள் வார்த்தைகளாலும், செய்கைகளாலும் எத்தனையோ பேர் பலன் பெறுவார்கள். எத்தனையோ பேருடைய பாரங்களை நீங்கள் இலகுவாக்குவீர்கள். பலரையும் பிரமிக்க வைக்கும் காவியமாக இல்லா விட்டாலும் சிலரை சிலிர்க்க வைக்கும் ஒரு அழகான கவிதையாய் நீங்கள் கண்டிப்பாக வாழ்ந்து மடியலாம். நான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கிறேன் என்ற நிறைவுடன் உலகை விட்டு ஒரு நாள் பிரியலாம்.

தமிழ் – உலக மொழிகளின் தாய்மொழி!

தமிழ் மொழியின் தொன்மை.

தமிழின் வயது 2000 ஆண்டு 3000 ஆண்டு என ஏலம் போட்டு வருகின்றனர்.

பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது.

முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆசிய கண்டங்களுக்குக் குடியேறினர். இதனால் அந்தக் கண்டத்து இன்றைய மக்களிடம் திரியாத தமிழ்ச் சொற்களும், திரிந்த தமிழ்ச் சொற்களும் பற்பல இலக்கணக் கூறுகளும் இன்றும் அழியாத நிலையில் உள்ளன.

ஆஸ்திரேலியப் பழங்குடிகள்

நீ…நீங்கள் என்பதை, நீ, நிங்க என்கின்றனர். நான், நாம் ( நாங்கள் ) என்பதை நா, நாங்க என்கின்றனர். கண் ஐம்புலன்களில் சிறந்த தலையாய புலன் என்பதால், அதனை புலன் என்கின்றனர்.

என் கண் – நா புலன், உன் கண் – நின் புலன், அவன் கண் – அவன் புலன் என்கின்றனர். பிரதி பெயர்கள் நாடு விட்டு நாடு போகாது. மேலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த 50,000 – 30,000 ஆண்டுகளை ஒட்டியோ அல்லது அதன் பின்னரோ தமிழகத்துடன் தொடர்பு இல்லை.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள்

எள் + நெய் என்பதுதான் எண்ணேய் ஆயிற்று. எனவே OIL என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் நெய் என்பதே ஆகும். தமிழகத்தில் நெய் என்ற சொல் பசுவின் நெய் என்றாகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் வழக்கு மொழிகளில் நெய் என்பதே ஆயில். உண் என்ர வினைச் சொல் எகிப்து மொழியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.

தென் அமெரிக்கத் தமிழர்

அன்னை என்ற அருமையான அற்புதத் தமிழ்ச் சொல், தென் அமெரிக்காவில் ஒரு மொழியான இன்கா மொழியில் உள்ளது. சரி என்று நாம் கூறுவதைம் அவர்கள் கரி ( ச = க ) என்கின்றனர். நம் பயிர் பச்சைகளுக்குக் கடவுளாகப் பச்சை அம்மன் என்று நாம் கூறுவதைப் போல், அவர்களும் தம் பயிர்க் கடவுளாகப் பச்சை அம்மன் என்றே வைத்துள்ளனர். 60,000 – 50,000 ஆண்டுகளாக நமக்கும் தென் அமெரிக்காவின் பல குடி மக்களுக்கும் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.

எனவே 60,000 ஆண்டுகளுக்கு மு8ன்னரே தமிழ் செம்மையான செம்மொழியாக இருந்தது என்றால் தமிழின் வயது ( 1,00,000 ) ஓர் இலட்சம் ஆண்டுகள் என்று கணிக்கலாம். வெறும் சொல் ஆராய்ச்சிச் சான்றுகள் மட்டுமில்லை; கரி, அணு ஆய்வுகளும் ஆண்டுக் கணக்கை உறுதி செய்கின்றன.

=====

எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் ‘அகில மொழி’ யின் அற்புதங்கள்.

உலக அறிஞர்கள் பார்வையில் “பன்மொழி அறிஞர்” சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், “தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது” –
சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.

“நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்”
– நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.

“பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்”
– கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.

“தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்”
– டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.

“இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்”
– டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.

இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த” மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்…

தமிழே உலகமொழிகளின் தாய்மொழி

தமிழே உலகமொழிகளின் தாய்மொழி என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.

களி (மண்) – Clay. பிறப்பு – Birth. பொறு – Bear. நாடுதல் – நாடு (ஜெர்மன்). கண் – கண் (சீனா). உப்பர் – ஊப்பர் (இந்தி).

தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்

“நாமம் – நாம் (இந்தி). தாழ்வு – தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் – Immoral. இல் – Illegal. நிர் – Nil. அன் – Unused. அவ/அப – Abuse.

தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.

பதின் – Ten. உருண்டை – Round. உருளை – Roll. அம்மா – மா (இந்தி). நிறங்கள் – றங் (இந்தி). உராய் – Rub. அரிசி – Rice

காரணப் பெயராகிய புதிய சொற்கள்

தேங்குதல் – Tank. ஈனுதல் – Earn என்றும்

திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.

* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.
* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் “ஹொங்கரோ ஹொங்கர்” என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.
* கண்-கண் காண் – காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.
* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.
ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.

* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.

S பேச்சு – Speech. S மெது – Smooth. S உடன் – Sudden. S நாகம் – Snake
* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு – ஆட் (இந்தி) பத்து – ஹத்து (கன்னடம்) கடை – கெடா (மலாய்) பூங்கொத்து – கொத் (ஜெர்மன்)

* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா – கேரளம்
கல்லூர் – ஆந்திரம்
கல்முனை – இலங்கை
கல்லினா பாட் – ரஷ்யா

* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை – ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்

* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.

* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.

ஹிப்ரு மொழி
மனுஏல் – மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்

இவ்வாறு “உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.

“கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன்” ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது.

கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் இலத்தீன் கிரீட் தொடர் பற்றாக இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.

“ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது?

(1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர். எனவேதான், திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே!
(2) மங்கோலியர், சீனர், மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள், அரபிய மற்றும் சிலாவியர், ரோமானியர், ஜெர்மானியர், மலேசிய பாலினேசியர், இந்தோ ஆரியர், தென் அமெரிக்கர், ஆப்பிரிக்க மக்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் – இங்ஙனம் உலக மக்கள் பிரிவினர் யாவருமே திருவிடரே! கடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிம் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.

15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.

16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி – ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று – என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. இசுலாம், கிறித்தவம் படைத்த தீவிரவாதங்களையும் உலகப் போர்களையும் தமிழ் நாகரிகம் ஏற்கவே இல்லை.

17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.

18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா? கைந்னித் தமிழ் என்கிறோம் ஏன்? உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசு. உலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதி கூறுகிறார். பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர். எனது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இதனால்தான் எனது நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது. தமிழின் இத்தகைய வீச்சிற்கும், வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை?

இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும். உச்சரிக்கக் கடினமான சொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர். மேலும் மொழி என்பது பாமரர் சொத்து என்பதை ஒரு சட்டமாகவே வைத்திருந்தனர். சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒரு தடையாக இருத்தல் ஆகாது என்று திட்டமிட்டிருந்தனர். எனவே மறபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர்.

தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிர, ஒரு சிறு எல்லைக்குள் நிலைபெறவில்லை.

கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பான சூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம் என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது.

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்

1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.

3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர – சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.

4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.

5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?

6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி – ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.

8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.

9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.

10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.

11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.

12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.

13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.

14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்குடரே!
(3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியா மொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர். ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தே வடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும். எனவே திருவிட மொழியாம் தமிழ் உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது என்று உலகளாவிய தமிழ் என்று, தான் எழுதியிருக்கும் நூலின் மூலமாகவும் விளக்கத்தை தந்திருக்கும் தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் சாட்சிக் களத்திற்காக விதைத்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.

தமிழ் எழுத்துக்கள் எப்படி எப்படி மாறும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டே மாறுகிறது.

ஆகவே என்னோடு இந்த ஆய்வுகள் நின்றுவிடாமல் தொடர வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் இந்தத் தமிழ்மொழியை இளைஞர்கள் குழு மூலம் மக்களை ஒன்று திரட்டி பெரும் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் ஆசையை பழுத்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியதைக் கண்டு தமிழே நெகிழ்ந்ததைப் போல அவ்வப்போது தெரிவித்து வருகிறார்”. இப்பேற்பட்டவர் ஒரு தமிழாசிரியிராக இருப்பாரா? பேராசிரியராக இருக்கலாம்? இல்லை தமிழ்த்துறை தலைவராகத்தான் இருக்க வேண்டும்? இத்தனை தமிழ் சார்ந்த் தகவல்களை சொன்னவர் ஏன் ஒரு பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது? என்று நினைப்போர்க்கு…
இவர் அப்படி எந்த பதவியிலும் இல்லை

ஆனால் அத்தனை தகுதிகளையும் கொண்ட இன்னொரு தமிழ்தாத்தா என்று சொல்லும் அளவிற்கு தமிழ் மொழிப்புலமை சாத்தூர் சேகரன் அய்யாவிடம் புதைந்து கிடக்கிறது.

சரி இவர் என்ன படித்திருக்கக் கூடும்? எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) இது முழுக்க முழுக்க அவர் படித்து முடித்துவிட்ட பட்டங்கள். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்…

“இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்”.

“உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.

தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி… தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.

தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ – மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் அகிலமொழி எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற கோ மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் ‘அகிலமொழி’ யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.

மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்.

http://www.sathursekaran.com/

http://www.youtube.com/watch?v=gB-L3D-CZqU


http://www.youtube.com/watch?v=gOTuxIOoi7k

http://www.youtube.com/watch?v=c131JwY4cCE

*தகவல் வழிகாட்டி*

சட்டம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய கடமை, கட்டாயம். சட்டம் தெரியாது என்பது ஏற்புடையதல்ல என்பது நீதிமன்றத்தின் வாதம். முக்கிய சட்டங்களை தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

அறிந்து கொள்ள வேண்டி *சில முக்கிய தீர்ப்புகள்!*

1. அடையாள அணிவகுப்பு காலதாமதமாக நடத்தப்பட்டால் அது செல்லாது *(அரிநாத் எதிர் உ.பி. அரசு AIR 1988 SC 345)*

2. காவல் நிலையத்தில் எதிரியை சாட்சியிடம் அடையாளம் காட்டினால் செல்லாது *(அகமது பின் சலீம் எதிர் ஆந்திர அரசு AIR 1999 SC 1617)*

3. புகைப்படம் நாளிதழ்களில் வெளியான பின் நடைபெறும் அடையாள அணிவகுப்பு செல்லாது. *(ரவிந்திரா எதிர் மகராஸ்ட்ரா அரசு AIR 1998 SC 3031)*

4. எல்லா வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்ய வேண்டியது இல்லை. *(ஜோகீந்தர்குமார் எதிர் உ.பி. அரசு 1994 Crl LJ 1981)*

5. கைது செய்யப்பட்டவருக்கு நடுவர் உத்தரவு இல்லாமல் கைவிலங்கிடக் கூடாது *(ஜனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு எதிர் அசாம் அரசு 1995 (3) SCC 743)*

6. பிணையில் வந்தவரின் பிடி ஆணை திரும்பப்பெற அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தேவையில்லை. *(வலியுலார் செனிட் எதிர் நல்லூர் சா.நி. 2000(3) MWN Cr 28)*

7. பிணையில் வந்தவர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டால் முதல் வழக்கில் தொடர்ந்து சிறையில் வைக்கக்கூடாது *(அப்பு (எ) சாந்தகுமார் எதிர் தமிழக அரசு [2004 (1) TNLR 599 (Mad)]*

8. குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் 60 நாள் அல்லது 90 நாள் முடிந்தவுடன் பிணை வழங்க வேண்டும். *(முகமது காமில் எதிர் ஆய்வாளர் சிறப்புப் புலனாய்வு (2000 (1) MWN Cr 70)*

9. இலவச சட்ட உதவி பெறுவது அவரின் அடிப்படை உரிமை. *(காட்ரி எதிர் பிகார் அரசு AIR 1981 Sc 928)*

10. சிறைக் கைதிகளுக்கு அடிப்படை உரிமைகளை அனுபவிக்க உரிமை உண்டு. *சுனில்பட்ரா எதிர் டெல்லி (AIR 1980 Sc 1579), (ராமமூர்த்தி எதிர் கர்நாடகா அரசு AIR 1997 Sc 1739), (அரசு எதிர் சாருலா சோகி AIR 1999 SC 1379)*

11. கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிருத்தப்படாவிட்டால் அது சட்டவிரோதம். *(பிரவீன்குமார் சந்திரகாந்த் எதிர் குஜராத் அரசு 2002 (1) Crime 277)*

12. கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்குள் மட்டுமே காவல்துறை காவலில் விசாரிக்க முடியும். *(சி.பி.ஐ. எதிர் அனுபம் குல்கர்னி AIR 1992 SC 1768)*

சிந்தனை வரிகள்..!

✍️உங்களால் செய்யக்கூடிய ஒரு செயலை இன்னொருவரிடம் செய்யும்படி கேட்காதீர்கள்…. உங்கள் கடமையைச் செய்ய முயலுங்கள்… உங்கள் தகுதியை உடனே அறிந்து கொள்ளலாம்…

▪️உலகம் ஒரு கண்ணாடியைப் போன்றது…. நாம் நகைத்தால் அதுவும் நகைக்கும்… நாம் முகம் சுளித்தால் அதுவும் முகம் சுளிக்கும்…

▪️மனிதரின் மனம் விந்தையானது… பழக்கப்பட்டுவிட்டால் எதையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விடும்… நம்பிக்கையே இல்லாமல் யார் வாழக்கூடும்… நம்பிக்கையால் வாழ்ந்தால் அட… யார் வாழ்க்கை வாடும்…

▪️சந்தேகம் தான் தீயை வைக்கும்… நம்பிக்கை தான் தீபம் ஏற்றும்… ஒழுக்கம் மரம் போல்… புகழ் நிழல் போல்… ஆபத்தில்லாத வெற்றி… பயனில்லாத வெற்றி…

▪️ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்… ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போங்கள்… வாழ்வை… வளங்களால், நலங்களால் நிரப்புவோம்…

▪️பட்டம் உயர உயர பறந்த போது ஆனந்தமாக இருந்தது… உயரே போன போது கைகள் வலித்தது… இப்போது மனசு வலிக்கிறது…. இப்படித்தானே உறவுகளும் தள்ளிப் போகையில்…!

YouTube 4K video support goes official for all Android devices

Washington: Online video-sharing platform YouTube has rolled out a new update that will give users the option to stream 4K/60p videos on any device, even if its display is not an Ultra HD one. According to Mashable, this new change was first discussed late last week on the YouTube subreddit where users noted that they…

YouTube 4K video support goes official for all Android devices

❌No More WhatsApp

பழைய செய்திதான்… இருந்தாலும் மீண்டும் ஒரு நினைவூட்டலுக்காக பகிரப்படுகிறது.

#WhatsApp வாட்சாப்பை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென்றால், ஃபேஸ்புக்குடன் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள, பயனர்கள் சம்மதிக்க வேண்டும் எனக் கூறியது வாட்சாப் நிறுவனம்.
இந்த விதிமுறை பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பொருந்தாது. இருப்பினும் இந்த விவரத்தை அனைவருக்கும் அனுப்பியது வாட்சாப். #Facebook ஃபேஸ்புக்குக்கு தன் தரவுகளைக் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல என்றும், அதை விரிவாக்கமாட்டோம் எனவும் அழுத்தமாகக் கூறி வருகிறது வாட்சாப்.

வாட்சாப்புக்கு சிக்னல், ‘அரட்டை’, டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா?

வாட்சாப் புதிய பிரைவசி கொள்கை அப்டேட்: எச்சரிக்கும் வல்லுநர்கள்
ஆரம்பத்தில் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் இந்த புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றது வாட்சாப். ஆனால் தற்போது இந்த கடைசி தேதியை மே 15-ம் தேதி வரை ஒத்தி வைத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழப்பம் நிலவுவதாகவும், அதை தீர்க்க, இந்த கூடுதல் கால கட்டத்தைப் பயன்படுத்துவோம் என்றும் வாட்சாப் கூறியுள்ளது.

“எங்களால் (வாட்சாப் மற்றும் ஃபேஸ்புக்) உங்களின் தனி நபர் செய்திகளை பார்க்கவோ அல்லது நீங்கள் பேசும் அழைப்புகளை கேட்கவோ முடியாது” என வாட்சாப் செயலி தன் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளது.
வாட்சாப் தன் தனியுரிமை கொள்கை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முந்தைய வாரம் சிக்னல் செயலியை சராசரியாக 2.46 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால் வாட்சாப்பின் கொள்கை வெளியான அடுத்த வாரம் 88 லட்சமாக பதிவிறக்கங்கள் உயர்ந்துள்ளதாக சென்சார் டவர் என்கிற தரவு பகுப்பாய்வு நிறுவனம் கூறுகிறது.
குறிப்பாக, இந்தியாவில் சிக்னல் பதிவிறக்கங்கள் 12,000-ல் இருந்து 27 லட்சமாகவும் அதிகரித்திருக்கிறது. பிரிட்டனில் 7,400-ல் இருந்து 1.91 லட்சமாகவும், அமெரிக்காவில் 63,000-த்திலிருந்து 11 லட்சமாகவும் அதிகரித்திருக்கிறது.

கடந்த புதன்கிழமை, உலக அளவில் டெலிகிராமின் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்துவிட்டதாகக் கூறியது அந்நிறுவனம். வாட்சாப்பின் புதிய கொள்கை வருவதற்கு முந்தைய வாரம் 65 லட்சமாக இருந்த பதிவிறக்கங்களின் எண்ணிக்கை, அதன் பிறகு 1.1 கோடியை தொட்டிருக்கிறது.
இதே காலகட்டத்தில், வாட்சாப் செயலியின் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 1.13 கோடியிலிருந்து 92 லட்சமாக குறைந்திருக்கிறது.

வாட்சாப் என்ன மாதிரியான தரவுகளை எல்லாம் ஃபேஸ்புக் உடன் பகிர்கிறது?

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனுக்கு வெளியே உள்ள பயனர்களிடமிருந்து பகிர்ந்து கொள்ளும் தரவுகளில் செய்திகள், குழுக்கள் அல்லது அழைப்பு பதிவுகள் கிடையாது என வாட்சாப் கூறியுள்ளது.
அலைபேசி எண் மற்றும் பதிவு செய்து கொள்ளப் பயன்படுத்தும் பிற தகவல்கள் (பெயர் போன்றவை)
அலைபேசி தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், ரகம் உள்ளிட்ட தகவல்கள்
பயனரின் இணைய இணைப்புகளின் இருப்பிடத்தைக் குறிக்கும் இணைய முகவரி (ஐபி)
வாட்சாப் மூலம் செய்யப்படும் பணம் மற்றும் நிதிசார்ந்த பரிவர்த்தனை விவரங்களை ஃபேஸ்புக்குடன் பகிரப்படும் என்கிறது வாட்சாப்.

உங்களைப் பற்றிய தகவலை விற்றுத் தான் ஒரு செயலியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாட்சப் மாற்றாக பல செயலிகள் இணையத்தில் இருக்கிறது. உங்கள் தகவலை பாதுகாக்க விரும்பினால் உடனே செயலியை விட்டு வெளியேறுங்கள்.

வெறுமனே Uninstall செய்வதால் நீங்கள் வாட்சப்பை விட்டு வெளியேறியதாக அர்த்தம் இல்லை. ஏற்கனவே இருக்கும் உங்களைப் பற்றிய தகவல் வேறு யாருக்கும் பகிரப்படலாம். நிரந்தரமாக உங்கள் #WhatsApp கணக்கை அழிப்பது மட்டுமே தற்போதைக்கு தீர்வாக தெரிகிறது.

நன்றி BBC.
https://www.bbc.com/tamil/business-55623837